பாராசூட்டில் குதித்தபோது நடுவானில் ரஷ்யா விமானி சுட்டு படுகொலை- திடுக் தகவல்கள்
டமாஸ்கஸ்: சிரியா எல்லையில் ரஷ்யாவின் போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது போது அதில் இருந்த 2 விமானிகள் பாராசூட்டில் இருந்து குதித்துள்ளனர். ஆனால் அவர்களும் நடுவானிலேயே சுட்டு படுகொலை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் இவர்களில் ஒரு விமானி தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக ப்ரீ சிரியா ஆர்மி (FSA) என்ற கிளர்ச்சி குழு உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த குழுவுக்கு அமெரிக்காதான் முழுமையான ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. இதற்கு துருக்கியும் ஆதரவு அளித்து வருகிறது. இக்குழுவின் கட்டுப்பாட்டில் சில பகுதிகள் உள்ளன.
தீவிரவாத இயக்கங்களான அல் நூஸ்ரா முன்னணி, ஐ.எஸ்.எஸ்.ஐ. ஆகியவையும் சிரியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றியுள்ளன. இந்த இரு தீவிரவாத இயக்கங்களை ஒழிப்பதற்காக அமெரிக்காவும் துருக்கி உள்ளிட்ட அதன் நட்புநாடுகளும் சிரியா, ஈராக்கில் விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கு குர்து ராணுவத்தினரும் உதவி வருகின்றனர்.
சிரியாவில் ரஷ்யா
இதனிடையே சிரியா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா திடீரென களமிறங்கியது. ப்ரீ சிரியா ஆர்மி, அல் நூஸ்ரா முன்னணி மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆகியவற்றுக்கு எதிரான விமானத் தாக்குதல்களை நடத்துவதாக ரஷ்யா அறிவித்தது. ஆனால் ரஷ்யாவின் இலக்கு பெரும்பாலும் அமெரிக்கா ஆதரவு ஆயுதக் குழுவான ப்ரீ சிரியா ஆர்மி மீதுதான் இருந்தது. இதனால் ரஷ்யாவுக்கும் அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.
வீழ்த்தப்பட்ட ரஷ்யா விமானம்
இந்நிலையில் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த சென்ற சுகோய்-24 ரக ரஷ்யா போர் விமானத்தை துருக்கி விமானப் படை நேற்று சுட்டு வீழ்த்தியது. முதலில் இந்த விமானம் எந்த நாட்டுக்கு சொந்தமானது என தெரியவில்லை எனக் கூறப்பட்டது. பின்னர் ரஷ்யா, எங்கள் நாட்டு விமானமே சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தது. இது தங்கள் முதுகில் குத்திய செயல் என்று ரஷ்யா அதிபர் புதின் சாடியிருந்தார்.
நடுவானில் விமானிகள் சுட்டு கொலை?
மேலும் பாராசூட்டில் இருந்து சிரியா பகுதியில் குதித்த 2 விமானிகளளையும் நடுவானிலேயே துருக்கி ராணுவம் சுட்டு படுகொலை செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், துருக்கி ராணுவ துணை தளபதி அல்பஸ்லன் செலிக்கை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் துருக்கியோ, நாங்கள் விமானிகளை சுடவில்லை ப்ரீ சிரியா ஆர்மி தீவிரவாதிகள்தான் சுட்டுக் கொன்றதாக கூறியது.
ஒரு விமானி உயிருடன்?
மேலும் 2 விமானிகளும் உயிருடன் இருப்பதாகவும் அவர்கள் சிரியா பகுதியில் ப்ரீ சிரியா ஆர்மி வசம் உள்ளதாகவும் ஒருசில தகவல்கள் தெரிவித்திருந்தன. ஆனாலும் ரஷ்யா ராணுவ அதிகாரிகளும், விமானிகள் இருவரில் ஒருவர் பாராசூட்டில் இருந்து குதித்த போது தரையில் இருந்து துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி படுகொலை செய்தது என தெரிவித்தனர். மற்றொரு விமானியை தேடும் பணி தொடருகிறது எனவும் கூறியிருந்தார்.
தீவிரவாதிகள் வீடியோ
இந்த நிலையில் ப்ரீ சிரியா ஆர்மி தீவிரவாதிகள், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை பதிவிட்டனர். அதில் ரஷ்யா விமானி ஒருவர் தரையில் கிடப்பதாக அவர்கள் பேசிக் கொள்கின்றனர்... அவரை எங்கே எரிப்பது எனவும் விவாதிக்கின்றனர்.... பின்னர் அல்லாவை புகழ்ந்து அந்த தீவிரவாதிகள் முழக்கம் எழுப்புகிற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆகையால் மற்றொரு ரஷ்யாவின் விமானி குறித்த குழப்பம் நீடித்து வந்தது.
உயிருடன் மீட்பு
இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மற்றொரு விமானி படுகாயமடைந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுவிட்டதாகவும் அவர் விமானப்படை முகாமில் இருப்பதாகவும் ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.