அணு உலையை அழித்ததால் கோபம்... இஸ்ரேல் பிரதமரைக் கடத்த திட்டமிட்ட சதாம்!
ஜெருசலேம்: தங்கள் நாட்டு அணு உலையை அழித்ததால், பழி வாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் பிரதமரை ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசைன் கடத்த திட்டமிட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக் முன்னாள் அதிபராகவும் சர்வாதிகாரியாகவும் இருந்தவர் சதாம் உசேன். கடந்த 1981ம் ஆண்டு இவர் அதிபராக இருந்த போது, ஈராக் அணு உலை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்.
இந்நிலையில், சதாமின் வக்கீலான பாடி ஆர்ப், தற்போது புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். அதில், அவர் ஈராக் அணு உலையை குண்டு வீசி அழித்ததற்காக இஸ்ரேலை பழி வாங்க சதாம் திட்டமிட்டதாகக் குறிப்பிட்டுள்ளாராம்.
மேலும், பழி வாங்கும் நடவடிக்கையாக அப்போது இஸ்ரேல் பிரதமராக இருந்த மெனாசெம் பிகினைக் கடத்தி பாக்தாத் கொண்டு வர சதாம் முடிவு செய்ததாகவும், ஆனால் மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த தலைவர் ஒருவரின் வற்புறுத்தலால் அத்திட்டம் கை விடப் பட்டதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எனவே, விரைவில் வெளியாக உள்ள இப்புத்தகத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.