அதிசயம் ஆனால் உண்மை: சவுதி உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிட அனுமதி!!!
ஜெத்தா: சவுதி அரேபியாவில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. பெண்கள் வாகனம் ஓட்டக் கூடாது, வெளியே சென்றால் புர்கா அணிய வேண்டும், ஆண் துணையின்றி வெளியே செல்லக் கூடாது, ஆண்கள் அனுமதி இன்றி பாஸ்போர்ட்டுக்கு விண்ணபிக்கக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அவர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் முதல்முறையாக பெண்கள் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெண்கள் இதற்கென அமைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு சென்று தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து வருகின்றனர்.
வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டும் இதுவரை 16 பெண்கள் மட்டுமே தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதி நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 200 பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் பெண்கள் வரும் 17ம் தேதி வரை தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம். வாக்களிக்க விரும்பும் பெண்கள் வரும் 14ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.
சவுதியில் உள்ள 1, 263 வாக்குச்சாவடிகளில் 424 சாவடிகள் பெண் வாக்காளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் மரணம் அடைந்த மன்னர் அப்துல்லா தான் 2005ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலை அறிமுகம் செய்து வைத்தார். கடந்த 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆண்கள் மட்டுமே போட்டியிட்டு வாக்கும் அளித்தனர்.