இரு நாட்டு உறவில் திருப்பம்.. கத்தாருக்காக கதவுகளை திறந்த சவுதி அரேபியா!
கத்தார் நாட்டு மீதான தடையின் எதிரொலியாக கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளிடையேயான எல்லை மூடப்பட்ட நிலையில் ஹஜ்புனித யாத்திரிகர்களுக்காக எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ரியாத் : கத்தார் நாடு மீது பொருளாதார தடை விதிக்கப்பட்ட நிலையில் அந்த நாட்டுடனான எல்லைப் பகுதிகள் மூடப்பட்டன, இந்நிலையில் ஹஜ் புனித யாத்திரை வருவர்களுக்காக எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுக்கு உதவுவதால் கத்தார் உடனான ராஜாங்க ரீதியிலான உறவை துண்டிப்பதாக சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு உள்ளிட்ட நாடுகள் அறிவித்தன. கடந்த ஜீன் 5ம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வந்ததால் கத்தார் உடனான எல்லைப் போக்குவரத்து, கடல்வதி, தரைவழிப் போக்குவரத்தையும் வளைகுடா நாடுகள் துண்டித்தன.
இதனால் கத்தார் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது எனினும் துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கத்தாருக்கு உதவிக்கரம் நீட்டின. எனினும் கத்தார் நாட்டுடனான உறவை சரி செய்ய துபாய் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது சவுதி அரேபியா கத்தார் நாட்டிற்கு 13 நிபந்தனைகளை விதித்தது. துருக்கி நாட்டுப் படைகளை வெளியேற்ற வேண்டும், அல்ஜசீராவை மூட வேண்டும் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளை விதிக்கப்பட்டன. இதற்கு 2 மாதம் அவகாசமும் கொடுத்த நிலையில் நிபந்தனைகளை ஏற்க கத்தார் முன் வராததால் கத்தாருடன் தொடர்ந்து வளைகுடா நாடுகள் மோதல் போக்கையே கடைபிடித்து வருகின்றன.
இந்நிலையில் முதன் முறையாக 2 மாதங்களுக்குப் பிறகு கத்தார் சவுதி இடையிலான எல்லைப் பகுதி மெக்காவிற்கு ஹஜ் புனித பயணம் வருவோருக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக அந்த நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி ஏர்லைன்ஸ் விமானம் தோஹா விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டு கத்தாரி யாத்ரீகர்களை அவர்களது செலவில் அழைத்து வர மன்னர் உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் ஹஜ் பயணிகளுக்கு சவுதி அனுமதி வழங்கவில்லை என்று கத்தார் குற்றம் சாட்டியுள்ள நிலையில் எல்லைப் பகுதி திறந்து விடப்பட்டுள்ளது.