செளதி: மனைவிக்கு பிரசவம் பார்த்த டாக்டரை 2 ஆண்டுக்கு பின் துப்பாக்கியால் சுட்ட கணவர்
ரியாத்: சவுதியின் தலைநகர் ரியாத்தில் தனது மனைவி பிரசவத்தின் போது டாக்டர் மீது ஏற்பட்ட பொறாமையால் அவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதியின் தலைநகரான ரியாத்தில் உள்ள கிங் பகத் மருத்துவ சிட்டியில் செயல்பட்டு வரும் மருத்துவமனை ஒன்றின் மகப்பேறு ஆண் மருத்துவர் ஒருவர் பெண்மணி ஒருவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். பிரசவத்தின் போது இப்பெண்ணின் கணவரும் உடனிருந்துள்ளார்.
அப்போது அந்த மருத்துவர் தனது மனைவியின் உடலை தொட்டது இவருக்கு பிடிக்கவில்லை, ஆண் மருத்துவராக இருந்தபோதிலும், தனது முன்னால் எப்படி மனைவியின் உடல் பாகங்களை தொடலாம் என்று கோபம் கொண்டுள்ளார். இருப்பினும் குழந்தை பிறந்து 2 வருடங்கள் கழித்துவிட்டது. அந்த சம்பவம் அவரது மனதில் ஆழமாய் பதிந்துள்ளது.
தன்னுடைய மனைவியை எவ்வாறு அப்படி தொடலாம் என மனதுக்குள் வஞ்சனை அதிகரித்து கொண்டே இருந்தது. இதனால் மருத்துவரை பழிதீர்க்க எண்ணி அந்த நபர், ஒருநாள் மருத்துவரை தொடர்பு கொண்டு தனது மனைவியின் பிரசவத்திற்கு உதவிய உங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். எனவே, உங்களை எப்போது சந்திக்கலாம் என மருத்துவரிடம் அனுமதி கோரியுள்ளார்.
மருத்துவமனைக்கு கீழ் உள்ள பூங்காவில் சந்திக்கலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார், இதையடுத்து அங்கு வந்த அந்த நபர் மருத்துவருடன் பேசிக்கொண்டிருந்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மருத்துவரை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது, அதன்பின்னர் அந்நபரை தேடிப்பிடித்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில், பிரவசத்தின் போது மருத்துவர் மீது எனக்கு "பொறாமை" ஏற்பட்டது. அதனால் தான் இவ்வாறு செய்துவிட்டேன் என கூறியுள்ளார், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.