"தலையை" வெட்ட ஆட்கள் தேவை.. சவுதி அரேபியா அரசு பகீர் விளம்பரம்!
ரியாத்: சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிப்பது அதிகரித்ததை தொடர்ந்து, தலையை வெட்டும் ஆட்கள் தேவை என்று அந்த நாட்டு அரசு விளம்பரம் செய்துள்ளது.
உலகில் அதிகமாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகள் பட்டியலில் மன்னர் ஆட்சி நடைபெற்று வரும் சவுதி அரேபியா 5வது இடம் பிடித்துள்ளது. அங்கு தண்டனைக்குள்ளானவர்கள் தலையை வாளால் வெட்டி கொலை செய்ய வேண்டும். இத்தகையை பணியினை செய்ய, பலரும் தயங்குகின்றனர்.
எனவே, ‘மரண தண்டனையை நிறைவேற்ற' ஆட்கள் தேவை என்று சவுதி அரசு விளம்பரப்படுத்தி உள்ளது. மரண தண்டனையை நிறைவேற்ற 8 பேர்கள் வேண்டும் என்று சவுதி அரேபியா விளம்பரம் செய்து உள்ளது.
அரசு வெப்சைட்டில் இதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு முன் அனுபவம் தேவையில்லை என்றும், சம்பளம் குறைவாகவே தரப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சவுதி அரேபியாவில் 85 பேர்கள் தலையை வெட்டி கொலை செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு மொத்தமே 88 பேருக்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்தாண்டில் இது மேலும் அதிகரித்துவிட்டது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டு உள்ளது.
இந்த நிலை கவலையளிப்பதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கடந்த வருடம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதில் பெரும்பாலானோர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பாகிஸ்தான், ஏமன், சிரியா, ஜோர்டான், இந்தியா, இந்தோனேஷியா, பர்மா, ஷாட், பிலிப்பைன்ஸ் மற்றும் சுடான் நாட்டை சேர்ந்தவர்கள்.