ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதல்..கிளர்ச்சியாளர்கள் 23 பேர் பலி..
ஏமன்: சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையினர் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தியதில் ஹுதி ஷியா கிளர்ச்சியாளர்கள் 23 பேர் பலியாகினர்.
ஏமனில் நடைபெற்றுவரும் ஹுதி ஷியா பிரிவினர் தலைமையிலான உள்நாட்டு புரட்சியை முறியடிக்க கடந்த மார்ச் மாதம் முதல் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு விமானப்படைகள் களமிறங்கியுள்ளது.
மலைப்பாங்கான வடக்குப் பகுதியில் ஹுதி ஷியா கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது கூட்டுப் படையினரின் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசின. சக்கெய்ன் பகுதியில் நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலில் கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியது.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலைநகர் சனாவிலும் பல்வேறு இடங்களில் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
அங்கு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள வான்வெளிப் பாதுகாப்பு மையமும் ஆயுதக் கிடங்கும் தகர்க்கப்பட்டன. இத்தாக்குதல்களில் 23 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக சவூதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.