பிரெக்ஸிட் முடிவு: மறுதேர்தல் நடத்த 15 லட்சம் பிரிட்டன் மக்கள் வலியுறுத்தல்
லண்டன்: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது குறித்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற மனுவுக்கு 15 லட்சம் பிரிட்டன் வாசிகள் ஆதரவு அளித்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது குறித்து பிரிட்டனில் வியாழக்கிழமை பொதுவாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பு முடிவில் 51.9 சதவிகிதம் மக்கள் வெளியேறலாம் என்றும், 48.1 சதவிகிதத்தினர் வெளியேற வேண்டாம் என்றும் வாக்களித்துள்ளனர். பெரும்பான்மையோர் கருத்தின் அடிப்படையில் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் பிரிட்டன் பாராளுமன்ற இணையதளத்தில் வில்லியம் ஆலிவர் ஹீலே என்பவர் வெள்ளிக்கிழமை ஒரு மனுவை பதிவேற்றம் செய்துள்ளார். அதில், பொது வாக்கு பதிவானது 75 சதவீதத்திற்கு குறைவாகவும், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறலாம் அல்லது வெளியேற வேண்டாம் என்பதற்கான வாக்கு சதவீதம் 60 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் மறுதேர்தல் நடத்த வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு பதிவேற்றப்பட்டு 24 மணி நேரத்திற்குள்ளாக 15 லட்சத்திற்கு அதிகமானவர்கள் இந்த மனுவிற்கு ஆதரவாக கையேழுத்திட்டுள்ளனர். மக்களின் இந்த கோரிக்கைப் பற்றி வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.