செல்ஃபி எடுக்காதீங்க…பேன் பரவும்: எச்சரிக்கும் மருத்துவர்கள்
லண்டன்: செல்ஃபி எடுப்பதன் மூலம் பேன்கள் எளிதில் பரவி தொல்லை கொடுக்கும் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உட்கார்ந்தால் செல்ஃபி... நின்றால், நடந்தால் செல்ஃபி என உலகம் முழுவதும் செல்ஃபி மோகம் அதிகரித்து வருகிறது. எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் செல்போனில் செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர். சிலரோ பிணத்துடன் கூட செல்ஃபி எடுப்பது இன்றைக்கு வாடிக்கையாகி வருகிறது.
செல்ஃபி எடுக்கும் போது டீன்ஏஜ் வயதினர் தங்களது தலைகளை ஒருவருடன் ஒருவர் சாய்த்து போஸ் கொடுக்கின்றனர். இதனால் அவர்களுக்கு ஒருவர் தலையில் இருந்து மற்றொருவர் தலைக்கு பேன்கள் பரவுகின்றன என்று குழந்தைகள் நல டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பேன் தொல்லையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்த போது அவர்களில் பெரும்பாலோனோர் அதிக அளவில் செல்ஃபி எடுத்துக்கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.
எனவே செல்பி எடுக்கும் போது போட்டோவுக்கு போஸ் கொடுப்பவர்கள் தலைகளை ஒட்டி வைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
தங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களில் சிறுவர்களை விட சிறுமிகளுக்கே பேன் தொல்லை அதிகம் இருப்பதாகவும் எனவே செல்ஃபி எடுப்பதை குறைத்துக்கொள்ளவேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.