ஒபாமாகேர் எதிர்ப்பு மசோதா தோல்வி... ஆளும்கட்சி எம்பிக்களே எதிர்த்து வாக்களித்தனர்!
வாஷிங்டன்: அமெரிக்க செனட் சபையில் ஆளும் குடியரசுக் கட்சி எம்.பி.க்களே எதிர்த்து வாக்களித்ததால், 'ஒபாமா கேர்' காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்யும் மசோதா தோல்வி அடைந்தது.
அமெரிக்காவில் ஒபாமா அதிபர் பதவி வகித்தபோது, ஏழை எளிய மக்களும் மருத்துவ காப்பீடு செய்துகொள்ள வசதியாக குறைந்த பிரிமியத்தில் 'ஒபாமா கேர்' என்ற பெயரில் ஒரு காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். இதற்கான மசோதாவில் அவர் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந் தேதி கையெழுத்திட்டார்.
இந்த காப்பீட்டுத் திட்டம் சாமானிய மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 2 கோடி அமெரிக்கர்கள் இந்த திட்டத்தால் பலன் அடைந்து வருகின்றனர்.
ஆனால் அமெரிக்காவின் தற்போதைய அதிபரான டொனால்டு ட்ரம்ப் இந்த காப்பீட்டு திட்டத்தை பதவிக்கு வரும் முன்பே எதிர்த்தார். அதற்கு பெருமளவு நிதி வீணாவதாக குற்றம்சாட்டினார்.
பதவி ஏற்ற பிறகு போட்ட முதல் உத்தரவே, 'ஒபாமா கேர்' திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான்.
இந்த நிலையில் 'ஒபாமா கேர்' காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்யவும், இதற்கான மாற்றுத் திட்டத்தை இரண்டு ஆண்டுகளில் கொண்டு வரவும் வகை செய்யும் மசோதா பாராளுமன்ற செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த செவ்வாய்க் கிழமை நடந்த ஓட்டெடுப்பில் இந்த மசோதா மீது விவாதம் நடத்துவதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்தது. விவாதத்தின் முடிவில் புதன்கிழமை மாலை ஓட்டெடுப்பு நடந்தது.
இந்த ஓட்டெடுப்பில், 100 பேரைக் கொண்ட செனட் சபையில் மசோதாவுக்கு ஆதரவாக 45 ஓட்டுகள் விழுந்தன. ஆனால் எதிராக 55 ஓட்டுகள் கிடைத்தன. இதையடுத்து மசோதா தோற்றுப்போனது.
அதாவது ட்ரம்ப் கட்சி எம்பிக்களே எதிர்த்து வாக்களித்திருந்தனர்.
இது டிரம்புக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த மசோதா இப்படி 10 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதில் டிரம்பின் குடியரசு கட்சி எம்.பி.க்களுக்கே முக்கிய பங்கு இருக்கிறது. மூத்த எம்.பி., ஜான் மெக்கைன் உள்ளிட்ட 7 பேர் மசோதாவுக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.