கோல்ப் மைதானத்தில் தரையிறங்கிய விமானம் நொறுங்கி விபத்து- 7 பேர் பலி
சாந்தோ டோமிங்கோ: டொமினிக்கன் குடியரசு நாட்டில் நடந்த விமான விபத்தில் 6 சுற்றுலா பயணிகள் உடபட 7 பேர் உயிரிழந்தனர்.
இங்கிலாந்து மற்றும் சுவீடனை சேர்ந்த 6 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பூந்தா கானாவில் இருந்து அராயோ பாரிலுக்கு சிறிய ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென விமானத்தை கோல்ப் மைதானம் ஒன்றில் தரையிறக்க விமானி முயற்சித்ததாகத் தெரிகிறது.
அப்போது கோல்ப் மைதானத்திலேயே விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோல்ப் மைதானத்தில் விமானத்தை தரையிறக்க விமானி முயற்சித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானத்தை ஓட்டிய விமானியின் பெயர் ஹேக்டோர் சோரியனோ(37) என தெரிய வந்துள்ளது. ஆனால், விமானத்தில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளின் விபரம் தெரியவில்லை.
விபத்தில் பலியான சுற்றுலாப் பயணிகளின் விபரம் மற்றும் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.