கென்யாவில் பயங்கரம்... பேருந்திற்குள் புகுந்து 28 பயணிகளைக் கடத்தி, சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்!
நைரோபி: கென்யாவில் பேருந்துக்குள் புகுந்த தீவிரவாதிகள், பயணிகள் 28 பேரை கடத்தி வெறித்தனமாகச் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் மன்டேராவில் இருந்து தலைநகர் நைரோபிக்கு 69 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நடுவழியில் அப்பேருந்தை வழி மறித்த தீவிரவாதிகள், அதில் இருந்த பயணிகள் 9 பெண்கள் உட்பட 28 பேரை மட்டும் கடத்திச் சென்றனர். பின்னர் அவர்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்று சரமாரியாக சுட்டுக் கொன்றனர்.
சமீபத்தில் கென்யாவில் உள்ள கென்யாவில் எலாம்பாசா நகரில் 4 மசூதிகளில் புகுந்து தீவிரவாதிகள் உள்ளனரா? என போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதலை ஷபாப் தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். இதனை அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
சோமாலியாவில் இயங்கி வருகிறது அல்-ஷபாப் தீவிரவாத இயக்கம். இது அல் -கொய்தா இயக்கத்தோடு இணைந்த அமைப்பு. தற்போது ஆப்பிரிக்க யூனியனில் இணைந்துள்ள கென்யாவின் ராணுவம் சோமாலியாவில் முகாமிட்டுள்ளது. அங்கிருந்து கென்யா படைகளை வாபஸ் பெறும் படி வலியுறுத்தி அல்-ஷபாப் தீவிரவாதிகள் கடந்த 2011 முதல் இங்கு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இத்தாக்குதல் தொடர்பாக பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் கூறுகையில், தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களைத் தேர்வு செய்து கடத்திச் சென்று கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.