ஷார்ஜா பள்ளி தமிழ் மாணவர் தலைமையிலான குழுவினருக்கு சுற்றுச்சூழல் விருது
ஷார்ஜா: ஷார்ஜா அவர் ஓன் இங்கிலீஷ் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் தமிழ் மாணவர் ஹுமைத் ஹபிப் அபுபக்கர் தலைமையிலான குழுவினருக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வினை ஏற்படுத்தியமைக்காக சுற்றுச்சூழல் விருதினை 27.02.2014 அன்று ஷார்ஜா அரசின் சுற்றுச்சூழல் நிறுவனம் ஷார்ஜா கலாச்சார மையத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஷார்ஜா சஸ்டெயினபிலிட்டி அவார்ட் (Sharjah Sustainability Award) என்றழைக்கப்படும் இவ்விருது 30,000 திர்ஹம் பணமுடிப்பு மற்றும் நற்சான்றிதழும் கொண்டதாகும். ஹுமைத் ஹபிப் அபுபக்கர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவினர் இப்பரிசினை பகிர்ந்து கொள்வர்.
இவ்விருது சுற்றுச்சூழல் விழிப்புணர்வினை குறிப்பாக தண்ணீர் குறித்த விழிப்புணர்வினை தெருவோர நாடகங்கள், விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகியவற்றின் மூலம் மேற்கொண்டமைக்காக வழங்கப்பட்டது.
ஹுமைத் ஹபிப் அபுபக்கர் இது மட்டுமல்லாது கிரீன் குளோப் என்ற அமைப்பினை ஏற்படுத்தி சுற்றுச்சூழல், உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்விருதினைப் பெற்ற முதல் தமிழ் மாணவர் ஹுமைத் ஹபிப் அபுபக்கர் ஆவார். இவர் இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தை சேர்ந்தவர். அபுபக்கர் - யாஸ்மின் தம்பதியரின் மூத்த புதல்வர் ஹுமைத். இவரது தந்தை அமீரக தொலைதொடர்பு நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறார்.