எம்.பி. பதவியிழந்த 'பலான' பெர்லுஸ்கோனி.... ஆட்டம் குளோஸ்!
ரோம்: வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கு விசாரணையில் சில்வியோ பெர்லுஸ்கோனி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர் எம்.பி., பதவியை இழந்துள்ளார்
இத்தாலி நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்து-அரசியலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டி பறந்த வர் சில்வியோ பெர்லுஸ்கோனி வயது 77.
அரசியலில் மட்டுமன்றி மீடியாசெட் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். டிவி, பத்திரிகை, நிதி, வங்கி, விளையாட்டு, சினிமா உள்பட பல துறைகளில் இவர் கோடிக்கணக்கில் நிதி முதலீடு செய்துள்ளார்.
செக்ஸ் புகார்
2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம், 18 வயதுக்குட்பட்ட கரீமா என்ற சிறுமியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாகவும், அதற்காக அவர் ஏராளமான பணம் செலவிட்டதாகவும் பரபரப்பாக புகார் எழுந்தது. இத்தாலியில் கடும் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது. இதையடுத்து இவர் பதவி விலகினார்.
வழக்கு விசாரணை
மாபியாக்களுடன் தொடர்பு, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், வரி ஏய்ப்பு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பெர்லுஸ்கோனி மீது சுமத்தப்பட்டன. இவற்றிர்காக தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இவரது வலதுசாரிக் கட்சியின் கூட்டணியுடன்தான் தற்போதைய பிரதமர் என்ரிகோ லெட்டா ஆட்சியில் உள்ளார்.
வரி ஏய்ப்பு
வரி ஏய்ப்பு வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி, பெர்லுஸ்கோனிக்கு கோர்ட் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. எனினும், சட்ட விதிமுறைகளின்படி இவருக்கு வழங்கப்பட்ட தண்டனை ஓராண்டாக குறைக்கப்பட்டது. பெர்லுஸ்கோனி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் நிலை உருவானது.
அரசுக்கு நெருக்கடி
எம்.பி பதவியை இழந்தால் தன்னுடைய கட்சியின் சார்பாக ஆட்சியில் இருக்கும் அமைச்சர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என்று தனது ஆதரவு எம்.பி.க்களை பெர்லுஸ்கோனி வற்புறுத்தினார்.
கை கழுவிய ஆதரவாளர்கள்
ஆனால், அரசியலில் அவரது விசுவாசமான வலதுகரமாகவும், தற்போதைய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் இருக்கும் ஏஞ்சலினோ அல்பானோ இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
நிறைவேறிய தீர்மானம்
இந்நிலையில்,சில்வியோ பெர்லுஸ்கோனியை எம்.பி. பதவியை விட்டு நீக்குவது தொடர்பான தீர்மானம் புதன்கிழமையன்று இத்தாலி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நீண்ட விவாதம் மற்றும் எம்.பி.க்களுக்குள் கைகலப்பு போன்றவற்றிர்கிடையே பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் வெற்றி பெற்றது.
தேர்தலில் போட்டியிட தடை
இதனையடுத்து,சில்வியோ பெர்லுஸ்கோனியை எம்.பி. பதவியை விட்டு நீக்கியுள்ளதாக சபாநாயகர் பியெட்ரோ க்ராஸோ அறிவித்தார்.பாராளுமன்றத்தால் இப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
முடிந்த சகாப்தம்
3 முறை இத்தாலியின் பிரதமராக பதவி வகித்து-அரசியலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டி பறந்த சில்வியோ பெர்லுஸ்கோனியின் சகாப்தம் இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது.