நவீன தொழில்நுட்பத்தில் தமிழை தொடர்ந்து அங்கீகரிக்கும் சிங்கப்பூர்!
சிங்கப்பூர்: உலக அளவில் சிறந்த விமானநிலையம் என்று தொடர்ந்து முன்னிலை வகிப்பது சிங்கப்பூரின் சாங்கி விமானநிலையம்.
பயணிகளுக்கான வசதிகள், விமானநிலைய ஊழியர்களின் அணுகுமுறை, ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதி மற்றும் வியக்கவைக்கும் உட்கட்டுமான அமைப்பு என்று சொல்லிக் கொண்டே போகலாம் அதன் சிறப்பை.
இந்த விமான நிலையத்தில் மொத்தம் மூன்று முனையங்கள் (Terminal) செயல்பாட்டில் இருக்கின்றன. முற்றிலும் நவீனமயமாக்கப்பட்ட நான்காவது முனையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரயிருக்கிறது.
பாஸ்போர்ட் சோதனை
அந்த நான்காம் முனையத்தில் கடவுச்சீட்டு சோதனை செய்து (Check in) Boarding pass பெறுவது, பயணிகள் கொண்டுசெல்லும் உடைமைகளின் எடையை சோதிப்பது என அனைத்தும் நவீனமே.
தமிழுக்கு முக்கியத்துவம்
அந்த இடத்தில்தான் சிங்கையை நாம் மீண்டும் வணங்கி மகிழ வேண்டும். காரணம் சிங்கை தமிழுக்கு தொடர்ந்து அளித்துவரும் அங்கீகாரத்தை அங்கேயும் பார்க்கமுடிகிறது. கடவுச்சீட்டை (Passport) பயன்படுத்தி சிலநிமிடங்களில் Boarding pass பெறுவதற்காக ATM போல ஒரு நவீன இயந்திரம் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
மலாயுடன் தமிழும்
அதில் நாம் முதலில் செய்ய வேண்டியதே மொழியைத் தேர்ந்தெடுப்பதுதான். ஆங்கிலம்,சீனம்,மலாய் மற்றும் சில மொழிகளோடு நம் தமிழையும் அந்த தானியங்கி இயந்திரத்தில் சேர்த்திருக்கிறது சிங்கப்பூர் அரசு. அந்த இயந்திரத்தில் பயணிகள் எளிதில் தமிழைப் பயன்படுத்தில் Boarding pass பெரும்வகையில் வசதிகள் உருவாக்கப்பட்டிருக்கிறது
தமிழுக்குக் கிடைத்த பெரிய இடம்
இது தொழில்நுட்பத்தில் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய இடம் என்று நாம் கருதவேண்டும். ஓலைச்சுவடிகளிலும், கல்வெட்டுகளிலும்,செப்பேடுகளிலும் இடம் பெற்றிருந்த தமிழ் பல படி நிலைகளைத் தாண்டி இன்று கணினிவரை பயணப்பட்டிருக்கிறது. அந்தவகையில் அடுத்தத் தலைமுறைப் பயணமாக முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தில் தமிழை சிங்கப்பூர் பயன்படுத்தியிருக்கிறது. உலகத்தமிழர்கள் அனைவரும் இந்தச் செய்தியை மகிழ்வோடு பார்க்கவேண்டும்
நன்றி சொல்வோம்
உலக அளவில் சிறந்து விளங்கும் விமானநிலையத்தில் தமிழ் தொடர்ந்து இடம்பெறுவதை நினைத்து நாம்,நம் மகிழ்வையும் நன்றியையும் சிங்கைக்கு
தெரிவிக்கவேண்டும்.
செய்தி - படம்: க.தங்கமணி, சிங்கப்பூர்.