சிலியில் 54 ஆண்டுகளாக கும்பகர்ணனைப் போல உறங்கிக்கொண்டிருந்த கால்புகோ எரிமலை திடீரென வெடித்தது!
சாண்டியாகோ: சிலி நாட்டில் 54 ஆண்டுகளாக உறங்கிக்கொண்டிருந்த கால்புகோ எரிமலை வெடித்து சிதறியதைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
தலைநகரான சாண்டியோகோவில் இருந்து 1400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தெற்கு துறைமுக நகரமான பர்டோமோண்ட். இங்கு கால்புகோ எரிமலை உள்ளது. கடந்த 43 ஆண்டுகளாக செயலற்று இருந்த இந்த எரிமலை தற்போது மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
தொடர்ந்து வானில் சாம்பல் மற்றும் புகையை அது கக்கி வருகிறது. இதனால், எரிமலையைச் சுற்றி 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். அப்பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பின் காரணமாக பனிக்கட்டிகள் உருகி வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் உள்ளது.
அவசர நிலை:
இதன் காரணமாக அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது. அப்பகுதியில் விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நகரத்தை விட்டு வெளியேறியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
2வது இடத்தில் சிலி...
எரிமலைகள் நிறைந்த நாடுகளில் இந்தோனேஷியா முதலிடத்திலும், சிலி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இங்கு, ஏறக்குறைய, 500க்கும் மேற்பட்ட, இயக்கத்தில் உள்ள எரிமலைகள் உள்ளன. இதற்கு முன், சாண்டியாகோவில் உள்ள வில்லாரிகா எரிமலை வெடித்தது.
54 ஆண்டுகளுக்கு முன்...
கடந்த 1961ம் ஆண்டு, கால்புகோ எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது எழுந்த சாம்பல் புகை, வானில் 100 கி.மீ., பரப்பளவில் பரவியது குறிப்பிடத்தக்கது.
7 மணி நேரம் கழித்து...
முதல் வெடிப்பு உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 6 மணிக்கு ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இது நீடித்தது. இதனால் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பலும், புகையும் வியாபித்துக் காணப்பட்டது. அதன் பின்னர் 7 மணி நேரம் கழித்து மீண்டும் எரிமலை வெடித்தது. இப்போது லாவாவை அது கக்கியது.
நேரில் பார்வை...
பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை அதிபர் மிச்சல் பேச்லெட் நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்களும் வந்தனர்.