அமெரிக்கத் தமிழ்ப் பெண் முயற்சியில் விருதுநகர் மாவட்ட கிராமத்தில் ஒரு ஸ்மார்ட் அரசுப் பள்ளி!
ரிச்மண்ட்(யு.எஸ்): அமெரிக்கத் தமிழ்ப் பெண் முயற்சியால், விருதுநகர் மாவட்ட தைலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் போர்டு, ப்ரொஜக்டர், என அமெரிக்கப் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்காவிலிருந்து தமிழக விவசாயிகள், கிராமப்புற பள்ளிகள், நெசவாளர்கள் என பல நலத்திட்டங்களை நண்பர்களுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார் கவிதா பாண்டியன். இவர்.அமெரிக்காவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடங்கி முன்னெடுத்துச் சென்றவரும் ஆவார்.
7 ஆண்டுகளாக ஸ்கைப் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருகிறார். இதற்காக #OurvilleageOurresponsibility என்ற ஒரு குழுவை உருவாக்கி, கணிணி தொழில்நுட்ப வல்லுநர்களை இணைத்து செயல்படுத்துகிறார்... விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 அரசுப் பள்ளிகளில் இந்த ஸ்கைப் வகுப்புகள் நடைபெறுகின்றன.. 6, 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணிணி வகுப்புகள் தினந்தோறும் ஒரு மணி நேரம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் 12 தன்னார்வலர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டமாக கிராமப்புற பள்ளிகளின் வகுப்பறைகளை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் கவிதா பாண்டியன்.. அவரது தந்தை படித்த விருதுநகர் மாவட்ட தைலாபுரம் மேல் நிலைப் பள்ளியை முதலாவதாக தேர்ந்தெடுத்துள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான இந்த அரசு உயர்நிலைப் பள்ளி 1980ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியானது. தற்போது 1400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
டிஜிட்டல் போர்டு, ப்ரொஜக்டர், மானிட்டர், கீ போர்டு, காமிரா, ஸ்பீக்கர் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கி, ஏற்கனவே இருந்த வகுப்பறையை புதிதாக டிஜிட்டல் வகுப்பறையாக வடிவமைத்துள்ளனர்.. பழைய வகுப்பறையில் ஏசி, கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக சொந்தப் பணத்திலிருந்தே இரண்டரை லட்ச ரூபாய் வரை கவிதா செலவு செய்துள்ளார்.
ஸ்மார்ட் வகுப்பறையில் தினசரி 8ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஒரு வகுப்பு நேரம் நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் படங்கள் விளக்கத்துடன் சொல்லிக் கொடுக்கிறார்கள். உதாரணமாக உடற்கூறு பற்றி விளக்கும் போது உடலின் ஒவ்வொரு பாகத்தில் உள்ள இதய வால்வு, செல்கள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளையும், போர்டில் பெரிதாக்கி காட்டி எளிதில் புரிந்து கொள்ள உதவுகிறது.
ஆசிரியரின் உரையும் சேர்த்து பதிவு செய்து கொள்ள முடியும். பின்னர் மீண்டும் அதை இன்னொரு முறையும் பார்த்துக் கொள்ளலாம். அமெரிக்காவில் உள்ளது போல் நம்மூரிலும் வசதிகள் செய்ய முடியுமா என்று யோசித்த போது, விழுப்புரம் கந்தாடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியை அன்னபூர்ணா மோகன் இத்தகைய முயற்சியை நிறைவேற்றியதை அறிந்ததாக கவிதா கூறினார். அன்னபூர்ணாவிடம் தொடர்பு கொண்டு, மேலும் தகவல்கள் பெற்று தனது தந்தை படித்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கியதாக தெரிவித்தார்.
மாணவர்கள் கூடுதல் அக்கறையுடன் படிப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். புதிய தொழில்நுட்பத்துடன் கற்றுத் தருவது ஆசிரியர்களுக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது.
டெல்லியிலிருந்து கருவிகளை தருவிக்க குணசேகரன் உதவி செய்துள்ளார்., கார்த்தி தைலாபுரம் பள்ளியில் தேவையான அனைத்து ஒருங்கிணைப்பு பணிகளையும் மேற்கொண்டார்.. ஸ்மார்ட் வகுப்பறை தொடக்க விழாவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் எம்.எல்.ஏ சந்திர பிரபா, வத்ராயிருப்பு பி.டி.ஓ ரவிகுமார், பஞ்சாயத்து யூனியன் பி.டி,ஒ முத்து மாணிக்கம், தாசில்தார் சரஸ்வதி, வருவாய் ஆய்வாளர் ராஜா, கிராம நிர்வாக அதிகாரி சுந்தர்ராஜன் கலந்து கொண்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி ராஜா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் கவிதாவின் தந்தை பி.கருத்த பாண்டியன் கவுரவிக்கப் பட்டார்.
ஸ்கைப் வகுப்புகளையும் ஸ்மார்ட் வகுப்பறை திட்டங்களையும் மேலும் விரிவுபடுத்த விருப்பமாக உள்ளனர். மேலதிக தகவல்களுக்கு https://facebook.com/ourvillageourresponsibility/ என்ற முகநூல் பக்கத்திலும் [email protected] என்ற இமெயிலிலும் தொடர்பு கொள்ளலாம்.
- இர தினகர்