இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய 4 லஸ்கர் தீவிரவாதிகள் பாக்-ல் சுட்டுக் கொலை
லாகூர்: இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 4 லஸ்கர் இயக்க தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் இன்று சுட்டுக் கொன்றதாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் லாகூரின் மனவான் பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் ரோந்து சென்றனர். அப்போது பாதுகாப்புப் படையினர் மீது 7 பேர் கொண்ட தீவிரவாத கும்பல் தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதலில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்; 3 பேர் தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரும் ஜுபைர் என்ற நைக் முகமது, அப்துல் வஹாப், அட்னான் அர்ஷாத், ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டது. இந்த 4 பேரும் 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் 2008-ம் ஆண்டு லாகூர் மூன் மார்க்கெட்டில் தாக்குதல் நடத்தியதும் இந்த தீவிரவாதிகளே என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.