சீன நீர்மூழ்கி கப்பல்களை இலங்கையில் அனுமதிக்க மாட்டோம்... மங்கள சமரவீரா அதிரடி!
பீஜிங் : 'சீன நீர்மூழ்கி கப்பல்களை, இலங்கையில் இனிமேல் அனுமதிக்க மாட்டோம்' என இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்த போது, கடந்த ஆண்டு கொழும்பு துறைமுகத்துக்கு இரு முறை சீன நீர்மூழ்கி கப்பல் வந்தது. இது குறித்து இந்தியா அப்போது கவலை தெரிவித்தது.
இந்நிலையில், தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய அதிபராக பொறுப்பேற்ற சிறிசேனா முதல் சுற்றுப்பயணமாக, சமீபத்தில் இந்தியா வந்தார். அவரின் இரண்டாவது வெளிநாட்டுப் பயணம், சீனா என முடிவாகியுள்ளது. இம்மாதம் அவர் சீனா செல்ல உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா சீனா சென்றுள்ளார்.
பீஜிங் நகரில் சீன பிரதமர் லீ கெகியாங், வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோரை சந்தித்து பேசியதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் மங்கள சமரவீரா. அப்போது அவர் கூறியதாவது :-
‘‘கடந்த ஆண்டில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே இலங்கை வந்திருந்த சமயத்தில் சீன நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு எந்த சூழ்நிலையில் வந்தது என்று எனக்கு தெரியவில்லை. எங்கள் ஆட்சியில் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட அனுமதிக்கமாட்டோம்'' என்றார்.
முன்னதாக ராஜபக்சே இலங்கை அதிபராக இருந்த போது, சீனாவுக்கு பல்வேறு ஒப்பந்தங்களை வாரி வழங்கி இருந்தது. சீனாவும் இலங்கையில் ரூ. 3,600 கோடி மதிப்பிலான பல பிரம்மாண்ட திட்டங்களில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசின் மனமாற்றத்திற்கான காரணம் :
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடல் ஆதிக்கம், அமெரிக்காவுக்கும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. சீனாவுக்கும், ஜப்பானுக்கும் நல்லுறவு இல்லாத நிலையில், ஜப்பான் பிரதமர், இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, சீன நீர்மூழ்கி கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் தங்கிச் சென்றது ஜப்பானுக்கும் அதிர்ச்சி அளித்தது.
இவ்வாறு இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் வலுவாக எதிர்ப்பு தெரிவித்ததால் தான், சீனாவுடனான உறவு மற்றும் முதலீட்டு திட்டங்கள் குறித்து மறுபரிசீலனை செய்யப் போவதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளதாக, அந்நாட்டு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.