இலங்கை பிரதமர் பதவி.. மகிந்த ராஜபக்சேவை விட ரணிலுக்கே அதிக ஆதரவு: கருத்து கணிப்பு
கொழும்பு: இலங்கையில் பிரதமர் பதவிக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை விட தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கே அனைத்து சமூகத்தினரிடத்தில் அதிக ஆதரவு இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் மோதுகின்றனர்.
மகிந்த ராஜபக்சே மீண்டும் அரசியலுக்கு திரும்பியுள்ளதை அதிபர் மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட அவரது சொந்த கட்சியினரே எதிர்க்கின்றனர். இந்த நிலையில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் என்ற நிறுவனம் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.
இந்த கருத்து கணிப்பில் இலங்கையின் அடுத்த பிரதமராவதற்கு ரணில் விக்கிரமசிங்கேவுக்கு 39.8% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் மகிந்த ராஜபக்சே பிரதமராவதற்கு 27.5% பேர்தான் ஆதரவு அளித்துள்ளனர்.
இலங்கையின் பிரதமராவதற்கு மிகவும் பொருத்தமானவர் யார் என்ற கேள்விக்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழர்கள் 62.3% வீதமும், இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் 71.2% வீதமும், முஸ்லிம்கள் 62.3% வீதமும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மகிந்த ராஜபக்சே பிரதமராவதற்கு தமிழர்கள் 1.8% வீதமும், மலையகத் தமிழர்கள் 1.2% வீதமும், முஸ்லிம்கள் 1.6% வீதமும் மட்டுமே ஆதரவை தெரிவித்துள்ளனர்.
ஆனால் சிங்களவர்களில் 36% பேர் மகிந்த ராஜபக்சேவே பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் எனக் கூறியுள்ளனர். அதே நேரத்தில் 31.9% சிங்களவர்கள் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
அனைத்து சமூகத்தினருடன் ஒப்பிடுகையில் ரணில் விக்கிரமசிங்கேவுக்கே கூடுதலாக 39.8% பேரின் ஆதரவு உள்ளது.
மேலும் இத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிடக் கூடாது என்று 42% பேரும் போட்டியிடலாம் என்று 40% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ராஜபக்சே தரப்பு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.