ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய விசாரணை அறிக்கையை இலங்கை எதிர்க்கக் கூடாது: யு.எஸ். அட்வைஸ்
நியூயார்க்: போர் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கையை இலங்கை எதிர்க்கக் கூடாது என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது இலங்கை ராணுவம் இனப்படுகொலை செய்தது என்பது குற்றச்சாட்டு. லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது சர்வதேசத்தின் கோரிக்கை.
இது தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது. அதில் போர்க் குற்றங்களுக்கான சர்வதேச விசாரணையை அமெரிக்கா வலியுறுத்தி வந்தது.
ஆனால் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில், இலங்கையே போர்க்குற்ற விசாரணையை நடத்தலாம் என்ற அறிக்கையை அமெரிக்கா தாக்கல் செய்ய உள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் பிரதிநிதி நிஷா பிஸ்வால் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது உலகம் முழுவதும் தமிழர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதனிடையே நிஷா பிஸ்வாலுடன் இலங்கை சென்ற மற்றொரு பிரதிநிதி டாம் மாலினோவ்ஸ்கி தமது ட்விட்டர் பக்கத்தில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அறிக்கையை இலங்கை எதிர்க்கக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கை வெளியாகிய பின்னர் இலங்கை அரசு தன்னை நியாயப்படுத்தக் கூடாது;
When UN report comes hope #SriLanka gov will continue defending country w/o being defensive, accepting need to fully, honestly confront past
— Tom Malinowski (@Malinowski) August 27, 2015
அந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது; இலங்கை அரசானது கடந்த கால தவறுகளை தைரியமாக எதிர்நோக்க வேண்டும்; ஒருபோதும் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கக் கூடாது.
முழுமையான அளவிலும் நேர்மையாகவும் கடந்த கால பிரச்சினைகளை எதிர்கொள்ள இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
இவ்வாறு அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.