எங்கே போயின எங்கள் கிராமங்கள்?.. அழுது துடிக்கும் நேபாள மக்கள்!
காத்மாண்டு: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் ஏராளமான கிராமங்கள் நிலைகுலைந்து போயுள்ளன.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அந்த நாட்டில் உள்ள ஏராளமான கிராமங்கள் நிலைகுலைந்து போயுள்ளன.
பல்வேறு கிராமங்களில் ஒன்று, இரண்டு வீடுகளை தவிர அனைத்தும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. அந்த கிராமங்களுக்கு செல்லும் வழிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு குழுவினரால் அந்த இடங்களை அடைய முடியவில்லை. இதனால் கிராமத்தினரே இடிபாடுகளை அகற்றி பிணங்களை எடுத்து எரித்தும், புதைத்தும் வருகின்றனர்.
குளிரில் நடுங்கும் கிராமத்தினருக்கு அரசின் நிவாரணப் பொருட்கள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு டென்ட் மட்டும் தான் கிடைத்துள்ளது. இடிந்து தரைமட்டமாகியுள்ள வீடுகளில் இருந்து ஏதாவது உணவு கிடைக்குமா என்று தேடும் மக்களை காண முடிகிறது.
கோர்கா மாவட்டத்தில் உள்ள பார்பக் கிராமம் நிலநடுக்கத்திற்கு பிறகு அடையாளம் தெரியாத அளவுக்கு ஆகிவிட்டது. அந்த கிராமத்தில் வெறும் 20 வீடுகள் மட்டுமே நிலநடுக்கத்தில் இடியாமல் உள்ளன. மீதமுள்ள 1, 450 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இதனால் 9 ஆயிரம் பேர் தங்க இடமின்றி தவித்து வருகிறார்கள்.
கிராமத்தில் ஆங்காங்கே இடிபாடுகளில் பிணங்களாக உள்ளது. எங்கு திரும்பினாலும் பெண்கள் அழும் குரல் கேட்கிறது. எங்கள் கிராமத்தில் அனைவரின் வீட்டிலும் யாராவது இறந்துள்ளனர் என்று ஒரு பெண் தெரிவித்துள்ளார்.
இடிந்து கிடக்கும் தங்களின் கடைகளுக்கு முன்பு உரிமையாளர்கள் பாதுகாப்பாக நிற்பதுடன் அதில் இருந்து ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்கிறார்கள். இங்கிலாந்து மற்றும் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் வாழும் பார்பக் கிராமம் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு வளமான கிராமமாக இருந்தது.