செல்போனுக்கு அதிகம் அடிமையாவது பெண்கள்தானாம்!
வாஷிங்டன்: செல்போனுக்கு ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் அடிமைகளாக இருப்பதாக அமெரிக்க பல்கலை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தினசரி 10 மணிநேரத்திற்கும் மேலாக பெண்கள் செல்போனில் செலவிடுகின்றனராம்.
அமெரிக்காவின் டெக்சாஸின் பேய்லர் பல்கலைகழகம் சமீபத்தில் செல்போன் பயன்படுத்துவோர் குறித்த ஒரு ஆய்வு மேற்கொண்டது. இதில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் செல்போன்களை பயன்படுத்தி குறுஞ்செய்தி, ஈ-மெயில் அனுப்புவதாக தகவல் தெரிவித்துள்ளது.
ஆண்கள் 8 மணி நேரம் பயன்படுத்துவதாக இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக தங்களது செல்போன்களிலேயே மூழ்கியுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது இந்த ஆய்வு முடிவு.
ஆன்லைன் ஆய்வு
மாணவர்களை அடிப்படையாக கொண்டு ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 164 பேர் கலந்து கொண்டனர். இதிலிருந்து 24 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் செல்போன் செயல்பாடுகள் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.
செல்போன் அடிமைகள்
இதில் 11 பேரின் போன்கள் அவர்களின் பாலினத்தை பொறுத்து வித்தியாசப்பட்டது. இந்த ஆய்வில் பங்கேற்ற 60 சதவீத மாணவர்கள் தங்களின் செல்போனுக்கு அடிமைகளாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எரிச்சலடையும் பெண்கள்
இவர்களில் பெரும்பாலோனோர் பெண்கள் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் சிலர் தஙகளது செல்போன் இல்லாத நேரத்தில் எரிச்சல் அடைவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
சமூகவலைத்தளங்களில்
இதில் பங்கேற்ற மாணவர்கள் சமூக வலைதளங்களான பின்ட்ரஸ்ட், இண்ஸ்டாகிராம் போன்றவற்றை பயன்படுத்துவதாவும். எஞ்சியுள்ள நேரங்களில் இணையதளத்தில் தகவல் தேடுவது, கேம் விளையாடுதிலும் பொழுதை போக்குவதும் தெரியவந்துள்ளது.
எஸ்.எம்.எஸ். - இ மெயில்
ஒருநாளில் குறுஞ்செய்தி அனுப்புவது (சராசரியாக 94.6 நிமிடங்கள்), இ-மெயில் (48.5 நிமிடங்கள்), பேஸ்புக் சரிபார்ப்பது (38.6 நிமிடங்கள்), இணையதளத்தில் தகவல் சேகரிப்பது (34.4 நிமிடங்கள்), பாட்டு கேட்பது (26.9 நிமிடங்கள்) என செல்போனில் நேரத்தை செலவிடுகின்றனர்.
ஆண்களும் அடிமைகள்தான்
பெண்களைப்போல சில ஆண்களும் அதிக அளவில் இ-மெயில் அனுப்புவதாகவும், ஆனால் ஆண்கள் தகவல்களை சுருக்கி குறுகிய நேரத்தில் அனுப்புகின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
உறவுகளை வலுப்படுத்த
பெண்கள் பெரும்பாலும் சமூக வலைகளில் மூழ்கிகிடப்பதாகவும், அதன் மூலம் தங்களின் உறவுகளை வளர்ப்பதிலும் அதிகம் கவனம் செலுத்துவதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. தவிர, சிலர் ஆழமான உரையாடல்களிலும் ஈடுபடுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
படம் பார்க்கும் ஆண்கள்
ஆண்கள் இதுபோன்று இல்லாமல் பெரும்பாலும் படங்கள் பார்ப்பது, பாடல் கேட்பது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை மேற்கொள்கின்றனர். மேலும் ஒரு நபர் சமூக வலைகளில் நேரத்தை செலவிடும் நேரங்கள் அனைத்தும் வீணானது என்று குறிப்பிட்டிருந்தார்.
அடிமைகள் அதிகரிப்பு
இதுகுறித்து ஆய்வு நடத்திய ஆய்வாளர் ஜேம்ஸ் ராபர்ட்ஸ் கூறுகையில்,''செல்போன்களின் பயன்பாடுகள் எப்படி அதிகரித்துள்ளதோ அதே போல் அதற்கு அடிமையாவோரின் அளவும் கூடவே அதிகரித்து வருவதும் சாத்தியமான விஷயம் தான்.
அதிகம் செலவிடும் பெண்கள்
ஆண்கள் தங்கள் தகவல்களை ரத்தினச்சுருக்கமாகவும், குறுகிய நேரத்திலும் அனுப்பிவிடுகின்றனர். ஆனால் பெண்கள் ஒரு உரையாடலுக்கு அதிக நேரம் செலவிடுவதோடு, அவர்களின் உறவுகளை சமூக வலைதளங்கள் மூலம் பெருக்கி கொள்ள முயற்சிக்கின்றனர். அதனாலேயே அவர்கள் தங்கள் செல்போனில் மூழ்கிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.