ஜெர்மனியில் சுஷ்மா சுவராஜ்.. இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை
பெர்லின்: இருநாள் பயணமாக ஜெர்மனி வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இங்கு உயர்மட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
எகிப்து நாட்டில் பயணத்தை முடித்துக்கொண்ட சுஷ்மா சுவராஜ் இன்று ஜெர்மனி தலைநகர் பெர்லின் வந்தடைந்தார். இங்கு அவர், ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் பிரான்ஸ் வால்டர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இருநாடுகளின் பேச்சு வார்த்தையின்போது, பாதுகாப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, பாதுகாப்புத்துறை மேம்பாடு மற்றும் தொழில் முதலீடுகள் குறித்து விவாதிக்கப்படும்.
வர்த்தகத்துறையில் இந்தியாவின் மிக நெருங்கிய கூட்டாளி ஜெர்மனியாகும். கடந்த ஆண்டில், ஜெர்மனிக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியான பொருட்களின் மதிப்பு 7.03 பில்லியன் யூரோஸ் ஆகும். அதேநேரம், ஜெர்மனியில் இருந்து இந்தியா செய்யும் இறக்குமதி அளவு 9.19 பில்லியன் யூரோஸ் என்பதில் இருந்து, 8.92 பில்லியன் யூரோசாக கடந்த ஆண்டு குறைந்தது.
இந்தியாவில் முதலீடு செய்துள்ள 8வது பெரிய அன்னிய தேசம் ஜெர்மனியாகும். கடந்த நிதியாண்டின் ஜனவரி-நவம்பர் இடைப்பட்ட காலத்தில், ஜெர்மனி இந்தியாவில் செய்த நேரடி அன்னிய முதலீட்டின் மதிப்பு 995.7 மில்லியன் டாலர்கள். எனவே இவ்விரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த ஏப்ரல் மாதம், பிரதமர் நரேந்திரமோடி, ஜெர்மனியில் சுற்றுப் பயணம் செய்தது நினைவிருக்கலாம்.