போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக சிரியா மீது ஐ.நா. குற்றச்சாட்டு: அதிபர் ஆசாத் மறுப்பு !
டமாஸ்கஸ்: சிரியாவில் போர்க்குற்றங்கள் நடப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் கூறிய குற்றச்சாட்டுக்கு அதிபர் ஆசாத் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவின் அதிபராக பசார் அல் ஆசாத் இருந்து வருகிறார். எகிப்து, லிபியா, துனிசியா நாடுகளில் 2011-ம் ஆண்டு அந்த நாட்டு அதிபர்களுக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டது. அதே நேரத்தில் சிரியாவிலும் அதிபர் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சி உருவானது. ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி படையினர் அரசு படைகளை தாக்கின. இரு தரப்புக்கும் இடையே 4 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது.
இதில் இதுவரை 2 லட்சத்திக்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அரசு படைக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் சண்டை நடந்து கொண்டு இருந்ததை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்த நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றிக் கொண்டனர்.
ஒரு பக்கம் கிளர்ச்சி படையின் தாக்குதல், மற்றொரு பக்கம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் என சிரியா நாடே சின்னாபின்னமாகியது. இதையடுத்து ஐ.எஸ்.தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகரிக்க தொடங்கியது. பின்னர் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் சிரியாவிற்கு உதவ அமெரிக்கா மற்றும் ரஷ்ய கூட்டுப் படைகள் களத்தில் இறங்கின.
இந்நிலையில். சிரிய அதிபர் பசார் அல் ஆசாத் ஆட்சி காலத்தில் நடைபெற்ற போரின் போது போர்க்குற்றங்கள் நடைபெற்றதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டி இருந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள அதிபர் ஆசாத், இது அரசியல்மயமாக்கப்பட்ட ஒன்று என தெரிவித்துள்ளார்.
சிரியாவில் உள்ள சிறைகள் மற்றும் தடுப்பு மையங்களில் உள்ள கைதிகளை ஆசாத்தின் அரசாங்கம் ஒட்டுமொத்தமாக அழிப்பதாக கூறி ஐ.நா. சமீபத்தில் கண்டனம் தெரிவித்தது. மேலும், அதிபர் ஆசாத்தின் ஆட்சியில் போர்க்குற்றங்கள் நடப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள அதிபர் ஆசாத், இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டது என்றும், அவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்றும் குறிபிட்டுள்ளார்.