ஜில் ஜில் ஏசி, ஓசி சாப்பாடு... இதற்கு ஆசைப்பட்டு கர்ப்பிணி போல நடித்த ‘கேடி’ கரடி
தைபே: தைவான் மிருகக்காட்சி சாலையில் தங்குவதற்கு ஏசி அறை, அதிகளவு மூங்கில்கள் மற்றும் கூடுதல் பழங்கள் போன்றவற்றைப் பெறுவதற்காக பெண் பாண்டா கரடி ஒன்று கரித்தரித்தது போல் நடித்து அனைவரையும் ஏமாற்றியுள்ளது.
தைவான் நாட்டில் மிருகக்காட்சி சாலையில் உள்ள பாண்டா கரடிகள் கருவுற்றால் அவற்றிற்கு ஏசி செய்யப்பட்ட தனி அறை வழங்கப் படுவது வழக்கம். அதோடு அவை உண்பதற்காக கூடுதல் பழங்களும், மூங்கில்களும் வழங்கப் படும். கிட்டத்தட்ட அந்த பாண்டா கரடிகளுக்கு ராஜ உபச்சாரம் செய்யப் படும்.
எனவே, கோடையின் உக்கிரத்தில் இருந்து தப்பிக்க மிருகக்காட்சி சாலையில் உள்ள யுவன் என்ற 11 வயது பெண் பாண்டா கரடி ஒன்று தான் கருவுற்றது போல் நடித்துள்ளது. ஜூன் 11--ம் தேதியில் இருந்து கர்ப்பமாக இருப்பதற்கான பசியின்மை, கருப்பை தடித்தல், புரோஜெஸ்ட்டிரோன் செறிவு ஆகிய அறிகுறிகளைக் காண்பித்திருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் செயற்கை முறையில் இந்த பாண்டா கரடியின் கருப்பையில் விந்தணு செலுத்தப் பட்டது. எனவே, அது தற்போது கர்ப்பமுற்றிருப்பதாக மிருகக்காட்சி சாலை ஊழியர்களும் நம்பியுள்ளனர்.
இன்னுமொரு பாண்டா கரடிக் குட்டி வரப்போகிறது என அவர்கள் ஆவலாக இருந்துள்ளனர். ஆனால், இந்த பாண்டா கரடியின் நடிப்பு தற்போது சாயம் வெளுத்து விட்டது. இதனால், ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.