அமெரிக்காவின் இர்மா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கொடுக்கும் ஒரத்தநாடு "அம்மா"
ஃப்ளோரிடா மாகாணத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவில் உணவகம் நடத்தி வரும் அம்மாஸ் கிச்சன் இலவச உணவுகளை வழங்கி வருகிறது.
Recommended Video
வாஷிங்டன் : ஃப்ளோரிடா மாகாணத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவில் உணவு விடுதி நடத்தி வரும் ஒரத்தநாடு இளைஞர் தினேஷ்குமாரின் அம்மாஸ் கிச்சன் இலவச உணவுகளை வழங்கி வருகிறது.
அமெரிக்க வராற்றிலேயே முதன் முறையாக புயல், கனமழை காரணமாக ஃப்ளோரிடா மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
வீடுகளை இழந்து தவிக்கும் மக்களும் அட்லாண்டா மற்றும் அண்டை மாகாணங்களில் உள்ள அமெரிக்க வாழ் இந்தியர்கள் உதவிக்கரம் நீட் வருகின்றனர்.
அம்மாஸ் கிச்சன் உதவி
ஃப்ளோரிடாவின் பல பகுதிகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இர்மா புயல் கரையைக் கடந்தாலும் மழை அதிக அளவில் இருப்பதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்குவதற்காக தேவாலயங்களும் திறந்து விடப்பட்டு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் 3 இடங்களில் செயல்பட்டு வரும் தமிழக உணவு விடுதியான அம்மா கிச்சன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகிறது.
ஒரத்தநாடு இளைஞர் தினேஷ்குமார்
தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தை பின்பற்றி அமெரிக்காவிலும் அம்மாஸ் கிச்சன் என்ற உணவகத்தைத் தொடங்கியுள்ளார் ஒரத்தநாட்டை சேர்ந்த தினேஷ்குமார். 30 வயது இளைஞரான தினேஷ்குமார், ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து முடித்து விட்டு ஐந்து நட்சத்திர ஓட்டலில் பணியாற்றியுள்ளார்.
பிரபலமான உணவகம்
இதனையடுத்து தமிழகத்தில் இருக்கும் அம்மா உணவகத்தை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டை விட்டு வந்து அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்காக இந்த அம்மாஸ் கிச்சனை நடத்தி வருகிறார். குறைந்த விலையில் தரமான உணவு என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் இயங்கும் அம்மாஸ் கிச்சன் அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே மிகப்பிரபலம்.
குறைந்த விலை உணவகம்
நியூஜெர்சி, ஃப்ளாரிடா, டெக்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் செயல்படும் அம்மாஸ் கிச்சனில் இட்லி, வடை உள்ளிட்டவை ஒரு டாலருக்கும், பிரியாணி 7 டாலருக்கும் விற்கப்படுகிறது. அமெரிக்காவில் 65 ஏக்கரில் நிலம் கொண்டுள்ள உள்ளூர் விவசாயிகளுடன் இணைந்து இயற்கை முறையிலான உணவுகளை வழங்கி வருகிறார் தினேஷ்குமார்.
சர்வதேச அளவில் ஜெயலலிதா புகழ்
தினேஷ்குமாரின் குடும்பத்தார் மறைந்த ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகள் என்பதால் அவருடைய புகழை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காகவே அம்மாஸ் கிச்சன் தொடங்கப்பட்டதாக தினேஷ் குமார் கூறுகிறார். குழந்தைகளுக்கு அம்மா அன்புடன் பரிமாறும் உணவைப் போல அம்மாஸ் கிச்சன் உணவு உள்ளதாக இங்கு உண்டு ரசித்த மக்கள் கூறுகின்றனர்.
உதவிக்கரம்
இந்நிலையில் தரமான உணவு, குறைந்த விலை, மண்ணின் சுவை உள்ளிட்டவற்றை அளித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் மனதில் இடம்பிடித்த தினேஷ்குமார். தற்போது இர்மா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கி மண்ணின் பெருமையை பறைசாற்றியுள்ளார்.