அடிப்பது நீ.. பெயர் எனக்கு..உலகையே சிதற விடும் ஐஎஸ்.. திகிலடிக்கும் தாக்குதல்கள்!
பாரிஸ்: உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு சிரியாவை முக்கிய மையமாக திகழ்ந்து வருகிறது. இங்கிருந்துதான் உலகம் முழுவதும் தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு ஊக்கமும், தைரியமும், உத்வேகமும் போய்ச் சேருகிறது. உலகம் முழுவதும் விரவிக் கிடக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் அதன் விசுவாசிகள் தங்களது பகுதிகளில் தாக்குதலை நடத்தி உலகையே நடுங்க வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே, பிரெஞ்சு அதிபர் பிரான்காய்ஸ் ஹாலன்டே கூறுகையில்,தீவிரவாதத் தாக்குதல்களைக் கண்டு பயந்து விடப் போவதில்லை என்றும் மேலும் தீவிரமாக தனது நாட்டைக் காக்க முயலப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். அதேசமயம், ஈராக் மற்றும் சிரியா விவகாரத்தில் பிரான்ஸின் பங்கை வலிமைப்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகள், திட்டங்களைப் பார்க்கும்போது அது சிரியா,ஈராக்குடன் நிற்கப் போவதாக தெரியவில்லை. மாறாக சிரியா, ஈராக்கைத் தாண்டி அது வியாபிக்க ஆரம்பித்துள்ளது. சிரியா,ஈராக்கில் அதன் நிலை வலுவிழந்துள்ளதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
6 மாதத்திற்கு முன்பே
சிரியா, ஈராக்கில் தனது பிடி தளர்ந்து வருவதை ஆறு மாதங்களுக்கு முன்பே உணர்ந்து விட்டது ஐஎஸ். இதனால்தான் அது உலக நாடுகளைக் குறி வைக்க ஆரம்பித்து விட்டது.
உங்க ஊருக்குப் போய் அடிங்க
இதன் காரணமாகவே தனது அமைப்பில் இடம் பெற்றிருந்த வெளிநாட்டுத் தீவிரவாதிகளை அவரவர் நாடுகளுக்குப் போகுமாறு ஐஎஸ் அமைப்பு உத்தரவிட்டது. இதற்குக் காரணம், அவரவர் நாட்டில் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக இருக்கும் என்பதால்.
தூண்டி விட்டுத் தாக்க வைக்கும் ஐஎஸ்
ஐஎஸ் அமைப்பின் மிகப் பெரிய பலமே, சரியான முறையில் இளைஞர்களைத் தூண்டி விடுவதுதான். அவர்களுக்குள் கற்பனைகளையும், கனவுகளையும் விதைத்து அது பலிக்க வேண்டுமானால் போய் தாக்கு என்று மூளைச் சலவை செய்து அனுப்பி வைக்கிறது ஐஎஸ்.
சமூக வலைதளம் மூலம் உலகை வளைக்கிறது
சமூக வலைதளங்கள் மூலமாக சிரியாவில் இருந்தபடி உலகையே வளைக்கப் பார்க்கிறது ஐஎஸ். உலகம் முழுவதும் தனது விசுவாசிகளை அதிகரிக்கச் செய்து அவர்கள் மூலமாக தாக்குதல் நடத்தப் பார்க்கிறது ஐஎஸ். நைஸ் நகரில் நடந்த தாக்குதலும் கூட அப்படிப்பட்ட ஒன்றுதான்.
அடிப்பது நீ.. பெயர் எனக்கு
தாக்குதல் நடத்துவது தனி நபர்களாக இருந்தாலும் கூட அதன் கிரெடிட் ஐஎஸ் அமைப்புக்குத்தான் போகிறது. இதுதான் அந்த அமைப்பு மீது பலரும் விசுவாசமாக இருக்க முக்கியக் காரணம்.
தொடர் தாக்குதல்கள்
அமெரிக்காவின் ஆர்லான்டோ, இஸ்தான்புல், பாரிஸ் நகரங்களில் நடந்த தாக்குதல்கள் இப்படித்தான் நடந்தன. இவர்களை மறைமுகமாக தூண்டி விட்டது ஐஎஸ் அமைப்பின் மீதான காதலும், கொள்கையும்தான்.
இந்தியா உஷாராக இருக்க வேண்டும்
இதுபோன்ற தாக்குதல்கள் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஏன் இந்தியாவிலும் நடக்கலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. எனவே ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து திருந்தி வந்ததாக கூறப்படும் நபர்கள் விஷயத்தில் தொடர்ந்து கண்காணிப்பு தேவை என்று அது மாநில அரசுகளையும், மத்திய அரசையும் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.