ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆப்பு வைத்த ஒரு செல்ஃபி
ரக்கா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட செல்ஃபியை வைத்து சிரியாவில் உள்ள அவர்களின் தலைமையகத்தை கண்டுபிடித்து தகர்த்துள்ளது அமெரிக்கா.
செல்ஃபி மோகம் பிடித்து திரிவது உலக மக்கள் மட்டும் அல்ல. உலகையே மிரட்டும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளும் தான். சிரியாவைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் செல்ஃபி எடுத்து அதை சமூகவலைதளத்தில் வெளியிட்டார். இதை அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள தொழில்நுட்ப நிபுணர்கள் பார்த்து அது குறித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வில் அந்த செல்ஃபி சிரியாவில் உள்ள ஒரு இடத்தில் இருந்து வெளியிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. செல்ஃபியை வைத்து அமெரிக்கப் படையினர் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தலைமையகத்தை 24 மணிநேரத்திற்குள் கண்டுபிடித்து தாக்கினர். அமெரிக்க போர் விமானங்கள் மூன்று குண்டுகள் போட்டு ஐஎஸ்ஐஎஸ் தலைமையக கட்டிடத்தை தகர்த்தது.
எந்த தலைமை கட்டிடம் தகர்க்கப்பட்டது என்ற தகவலை தெரிவிக்க அமெரிக்கா மறுத்துவிட்டது. தங்களின் அமைப்பைப் பற்றி பெருமை பேசி போட்டப்பட்ட செல்ஃபியால் தலைமை கட்டிடம் தகர்க்கப்படும் என்று அந்த தீவிரவாதி நினைத்திருக்க மாட்டார்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இதுவரை 1,700 புகைப்படங்கள், வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. டிவிட்டரில் அந்த அமைப்பை 2 லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.