பாகிஸ்தான் குவெட்டா தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு!
பாகிஸ்தானின் குவெட்டா காவல் பயிற்சி மையத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குவெட்டா: பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவின் காவல் பயிற்சி மையத்தில், திங்கட்கிழமை நள்ளிரவில் புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் பலியான பயிற்சி போலீசாரின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவின் காவல் பயிற்சி மையம் உள்ளது. இங்கு நள்ளிரவில் புகுந்த தீவிரவாத கும்பல் அங்கு பயிற்சி காவலர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டது. அங்கிருந்த நூற்றுக்கணக்கான பயிற்சிக் காவலர்களையும் பிணை கைதிகாளவும் பிடித்து வைத்துக்கொண்டனர். இந்த தாக்குதலில் காவல் பயிற்சி மையத்தில், இருந்த காவலர்கள் 33 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
தீவிரவாதிகளுக்கும், காவலர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதனிடையே தீவிரவாதிகள் தாக்கியதில் பலியான காவலர்களின் எண்ணிக்கை தற்போது 60 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தவிர, இச்சம்பவத்தில் 91 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவலர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டை முடிவுக்கு வந்தது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் பயிற்சி மையத்தில் இருந்த 600 காவல் அதிகாரிகள் பத்திரமாக மீட்டக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை பலோசிஸ்தான் மாகாண உள்துறை அமைச்சர் உறுதிபடுத்தியுள்ளார். காவலர் பயிற்சி முகாமில் தாக்குதல் நடத்தியது லக்ஷர் இ ஜவாங்கி அமைப்பு என தகவல் வெளியாகியுள்ளது.