பாக். போலீஸ் பயிற்சி மையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 7 போலீசார் காயம், 200 பேர் சிறைபிடிப்பு
குவெட்டா: பாகிஸ்தான் குவெட்டா நகரில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் புகுந்து தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 7 போலீசார் காயமடைந்தனர். 200 பயிற்சி போலீசாரை தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் குவெட்டா நகரில் காவலர் பயிற்சி மையம் உள்ளது. இதில் சுமார் 500 போலீசார் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் அந்த மையத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்த துவங்கினர்.
இதில் 7 போலீசார் காயம் அடைந்ததாகவும் 200க்கும் மேற்பட்ட பயிற்சி போலீசார் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 முதல் 6 தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தெரிவித்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பாகிஸ்தான் படையினர், சம்பவ இடத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தை பலுசிஸ்தான் உள்துறை அமைச்சர் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த தாக்குதலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் தாயர் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்த போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.