கத்தியை காட்டி மிரட்டியவனை கட்டிப்பிடி வைத்தியம் செய்து கூல் செய்த சூப்பர் போலீஸ்
கத்தியை காட்டி மிரட்டிய நபரை கூலாக பேசி கட்டிப்பிடி வைத்தியம் செய்து சமாதானப்படுத்தியுள்ளார் தாய்லாந்து போலீஸ் அதிகாரி.
பாங்காங்: கத்தியைக் காட்டி மிரட்டிய நபரிடம் சாவகாசமாக சமாதானம் பேசி கட்டிப்பிடித்து கத்தியை கைப்பற்றியுள்ளார் காவல்துறை அதிகாரி ஒருவர். இது நடந்தது இங்கல்ல... தாய்லாந்து நாட்டில்.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் உள்ள ஹுவாயி கவாங் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நபர் கையில் கத்தியுடன் நுழைந்து அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளை மிரட்டியுள்ளார்.
அந்த போலீஸ் நிலையத்திலிருந்த அனிருத் மலே என்ற போலீஸ் அதிகாரி தனது இரு கைகளையும் நீட்டியவாறு அழைத்தார். அந்த நபர் யோசிக்கவே, கூலாக, மெதுவாக பேசினார். அனிருத் பேச பேச கத்தியுடன் வந்த நபர் அழத் தொடங்குகிறார்.
கத்தியை கொடுத்த நபர்
அனிருத் ஒரு கட்டத்தில் அவரது கையிலிருக்கும் கத்தியை தன்னிடம் வழங்குமாறு கூறினார். உடனே அவர், சற்று யோசித்துக் கொண்டே நின்றார். ஒரு கட்டத்தில் அனிருத் மீது நம்பிக்கை வைத்து அந்தக் கத்தியை அனிருத்திடம் வழங்கி தனது இரு கைகளையும் தூக்கி சரணடைந்து அழுகிறார்.
கட்டிப்பிடி வைத்தியம்
அவரை கைது செய்யாமல் கட்டிப்பிடித்துக் கொண்டு சமாதானப்படுத்தினார் அனிருத். அனிருத் அவரை நற்காலியில் அமர வைத்து அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து தண்ணீர் குடிக்க வைத்தார். இந்தக் காட்சி அந்த போலீஸ் நிலையத்திலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
வைரல் வீடியோ
இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களிலும், இணையதளங்களிலும் வெளியாகி வைரலாகியுள்ளது.
சம்பளம் இல்லையே
அவரிடம் பேச்சு கொடுத்தபோது, அவர் ஒரு முன்னாள் இசைக் கலைஞர். ரது கிட்டார் இசை கருவி திருடு போயுள்ளது. இதன் காரணமாக அவர் மன அழுத்தத்தில் இருப்பதாக அவர் கூறினார். அவரது நிலையை அறிந்து கொண்டு என்னிடம் கிட்டார் ஒன்று உள்ளது அதை அளிக்கிறேன், கத்தியை என்னிடம் தாருங்கள் என்று கூறினேன். அவரும் என் மீது நம்பிக்கை கொண்டு அளித்து விட்டார் என்றார்.
குவியும் பாராட்டு
அனிருத்தின் இந்த மனிதாபிமானச் செயலுக்கு சமூக வலைதளத்தில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சரணடைந்த நபர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர். இதுவே நம்ம ஊர் ஸ்டேசனாக இருந்தால் லாடம் கட்டியிருப்பார்களோ?