வெளிநாட்டவருக்கு இனி ”வாடகைத்தாய்கள்” கிடையாது- தாய்லாந்து அரசு அதிரடி சட்டம்
பட்டாயா: தாய்லாந்தில் இனி வெளிநாட்டவர்களுக்கு வாடகைத்தாய்கள் மூலமாக குழந்தைகள் பெற்றுத் தரபோவதில்லை என்ற புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளடு.
ஆஸ்திரேலியாவிலிருந்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற ஒரு பெண் தாய்லாந்து வருகிறார். ஆஸ்திரேலியப் பெண்ணின் கருவை சுமந்த தாய்லாந்து பெண்ணுக்கு பிரசவம் நடக்கிறது.
பிறந்த குழந்தை வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறது. குழந்தையை அந்த தாய்லாந்து பெண்ணிடமே விட்டுவிட்டு அந்தப் பெண் ஆஸ்திரேலியாவுக்கு ஓடிவிட்டார்.
இதைவிட, ஜப்பானிலிருந்து வந்த ஒரு சுற்றுலாப் பயணி தாய்லாந்து பெண்கள் மூலமாக அதிவேகமாக 16 குழந்தைகளுக்கு தந்தையானார். இந்த சம்பவத்தை "குழந்தைகள் தொழிற்சாலை" என்று தாய்லாந்து தினசரி ஒன்று கடுமையாக விமர்சித்தது.
கடந்த வருடம் நடந்த இந்த இரண்டு சம்பவங்களும் வாடகைத்தாய் முறையால் தாய்லாந்து பெண்கள் அனுபவித்த கொடுமையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் வணிக ரீதியாக வாடகைத் தாய் முறை குற்றம் என்ற வரைவு சட்டத்திற்கு முதற்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது நேற்று முதல் சட்டமாக அமல்படுத்தப்பட்டது. மேலும் வாடகைத்தாய்களுக்கு 25 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் வெளிநாட்டிலிருந்து வந்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதை முற்றிலுமாக தடை செய்கிறது. இனி வெளிநாட்டினருக்கு தேவையான வாடகைத்தாய்கள் தாய்லாந்தில் கிடைக்கமாட்டார்கள்.