அமெரிக்கா, கியூபா 'ஜேம்ஸ்பாண்டுகள்' ரிலீஸ்!: ரகசிய பின்னணியில் போப்பாண்டவர்!!
வாஷிங்டன்: முதலாம் போப்பாண்டவர் தொடர்ந்து அதிசயிக்க வைத்து வருகிறார். இதுவரை இருந்த போப்பாண்டவர்களை விட இவர் மிகவும் வித்தியாசமானவர் என்பது ஆரம்பத்திலேயே தெளிவாகத் தெரிந்த நிலையில் தற்போது இவரது ராஜதந்திரம் உலகின் மிக நீண்ட பனிப்போர் ஒன்றை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது.
போப்பாண்டவர் எடுத்த அயராத முயற்சியின் காரணமாக அமெரிக்காவும் கியூபாவும் கைதான உளவாளிகளை விடுதலை செய்துள்ளன.
லத்தீன் அமெரிக்க நாடு கியூபா. போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து போப்பாண்டவராக வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அடிப்படை அம்சமும் கூட கியூபா மீதான அமெரிக்காவின் கோபப் பார்வையை நீக்க முயற்சி எடுக்க வைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அர்ஜென்டினா போப்
கியூபாவின் சகோதர நாடான அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ். அவர் கடந்த 2013ம் ஆண்டு போப்பாண்டவராக பதவியேற்றதுமே, கியூபா - அமெரிக்கா இடையிலான பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பணிகளைத் தொடங்கி விட்டார். போப்பாண்டவராக ஆனதுமே அவர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் பேசினார். கியூப தலைவர் ரால் காஸ்ட்ரோவுடன் பேசினார். கியூபாவின் பிடியில் இருந்த அமெரிக்கர் ஆலன் கிராஸ் என்பவரை விடுதலை செய்ய வழி வகுத்தார். இதுதான் அமெரிக்காவையும் ஒரு படி கீழே இறங்கி வர செய்தது.
18 மாத ரகசியப் பேச்சு
இரு நாடுகளுக்கும் கடந்த 18 மாதங்களாக ரகசியமாக பேச்சுவார்த்தை நடந்து வந்திருக்கிறது. இதை நேரடியாக தொடர்ந்து கண்காணித்து இரு தரப்பையும் ஊக்குவித்து வந்திருக்கிறார் போப்பாண்டவர்.
ரோம் நகர் வந்த ஒபாமா
கடந்த மார்ச் மாதம் ரோம் நகரில் ஒபாமாவைச் சந்தித்தார் போப்பாண்டவர். அப்போது கியூபா குறித்துத்தான் இருவரும் நீண்ட நேரம் பேசியுள்ளனர் என்று வாட்டிகன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இறுதிச் சுற்றில் கெர்ரி
இந்த ரகசியப் பேச்சுக்களின் இறுதிச் சுற்று ரோம் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி ரோம் வந்திருந்தார். கியூபாவின் குவான்டனாமோவில் உள்ள அமெரிக்காவின் விசாரணைச் சிறையை மூடுவது தொடர்பாக பேச வந்திருந்தார் கெர்ரி. அவரும், போப்பாண்டவரும் அது மட்டுமல்லாமல், கியூப விவகாரம், மத்திய கிழக்கு அமைதி உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் அப்போது விரிவாகப் பேசியுள்ளனர்.
ஒரே தலைவர்
கியூபா தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஒபாமா, காஸ்ட்ரோ தவிர மூன்றாவது வெளிநாட்டுத்தலைவராக இடம் பெற்றவர் போப்பாண்டவர் மட்டுமே. இப்படி போப்பாண்டவர் எடுத்த தொடர் முயற்சிகளின் காரணமாக, விளைவாக, கியூபாவைத் தனிமைப்படுத்தி வந்த தனது கொள்கையை கைவிடும் வேலையை ஆரம்பிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
மகிழ்ச்சி - வாழ்த்து
இதுதொடர்பாக வாடிகன் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த தருணத்திற்காக அமெரிக்கா மற்றும் கியூப தலைவர்களையும், இரு நாட்டு மக்களையும் போப்பாண்டவர் வாழ்த்துகிறார், பாராட்டுகிறார். இரு நாட்டு மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சி தருகிறது. இரு நாட்டு மக்களுக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் களையப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.
தொடர் கடிதங்கள்
சமீப காலமாக போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ், கியூபா அதிபருக்கும், அமெரிக்க அதிபருக்கும் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்தார். இரு நாட்டு மக்களின் பொது நலன் கருதி கருத்து வேறுபாடுகளைக் களைய முன்வர வேண்டும் என்று அவர் தொடர்ந்து கோரி வந்தார். சில கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும் அவர் பேசி வந்தார். இதன் மூலம் இரு நாட்டு வரலாற்றிலும் புதிய அத்தியாயம் தொடங்க வழி பிறந்தது.
அக்டோபரில் சுமூகம்
இரு நாட்டு பிரதிநிதிகளும் வாட்டிகனுக்கு கடந்த அக்டோபர் மாதம் வருகை தந்தனர். வாட்டிகன் அலுவலகம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவி புரிந்தது. இதன் மூலம் இரு தரப்புக்கும் இடையே சுமூக நிலை ஏற்பட வழி பிறந்தது.
ஆதரவு தொடரும்
இரு நாடுகளுக்கும் தனது ஆதரவை தொடர்ந்து போப்பாண்டவர் வழங்குவார். இரு தரப்பு உறவும் வலுப்படுவதை, மேம்படுவதையே போப்பாண்டவர் விரும்புகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
கியூபா போனதில்லை இதுவரை
போப்பாண்டவராக ஆன பின்னர் இதுவரை முதலாம் பிரான்சிஸ், கியூபா சென்றதில்லை. அதேசமயம் அவருக்கு முந்தைய போப்பாண்டவரான போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் கடந்த 2012ம் ஆண்டு கியூபா சென்றிருந்தார். 3 நாட்கள் அவர் அங்கிருந்தார்.
மனக் கவலை நீங்கியது
கியூபா, அமெரிக்கா இடையிலான மோதல் குறித்து போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் பலமுறை வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த நிலை மாற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தற்போது அதை சாதித்துள்ளார் போப்பாண்டவர்.
ஒபாமா, காஸ்ட்ரோ நன்றி
இரு நாடுகளுக்கும் இடையே அமைதி, சுமூகம் ஏற்பட உதவிய போப்பாண்டவருக்கு அதிபர் ஒபாமாவும், கியூபா அதிபர் ரால் காஸ்ட்ரோவும் நன்றி கூறியுள்ளார். ஒபாமா கூறுகையில், மிக முக்கியப் பங்காற்றியுள்ளார் போப்பாண்டவர். அவருக்கு நன்றிகள். தொடர்ந்து முன்னேறிச் செல்வோம் என்று கூறினார். ரால் காஸ்ட்ரோ கூறுகையில், வாட்டிகனுக்கு குறிப்பாக போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.