தீவிரவாதத்தில் நல்லது, கெட்டது என்று இல்லை.. மோடி
சான்ஜோஸ்: தீவிரவாதத்தில் நல்ல தீவிரவாதம், கெட்ட தீவிரவாதம் என்றெல்லாம் பாகுபாடு இல்லை. தீவிரவாதம், எப்போதுமே அபாயகரமானதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சான்ஜோஸில் உள்ள சேப் மையத்தில் இன்று இந்தியர்களிடையே பேசியபோது இப்படித் தெரிவித்தார் மோடி.
இந்தியில் பேசிய மோடியின் பேச்சிலிருந்து...
மெத்தனமாக செயல்படும் ஐ.நா. சபை
தீவிரவாதப் பிரச்சினையில் ஐ.நா. சபை சற்று நிதானமாக செயல்படுவது ஆபத்தானது. தீவிரவாதத்தை வேரறுக்க உறுதியான செயல்பாட்டை வரையறை செய்ய வேண்டும் ஐ.நா.
தீவிரவாத நாடுகளை ஒதுக்க வேண்டும்
தீவிரவாதத்தை வளர்த்து விடும், ஆதரிக்கும் நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால், நம்மால் மனித குலத்தைக் காப்பாற்ற முடியாது. தீவிரவாதம் எப்போதுமே தீவிரவாதம்தான், அபாயகரமானதுதான். அதில் நல்லது என்றும் தீயது என்றும் பாகுபாடு இல்லை.
நான் அப்போதே சொன்னேன்
1993ம் ஆண்டு நான் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தபோது, இந்தியா தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினேன். ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை. மாறாக சாதாரண சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்றுதான் சொன்னார்கள்.
தான் அடிபட்டபோது வந்த புத்தி
ஆனால் 2001ல் தீவிரவாதிகளால் அமெரிக்கா தாக்கப்பட்டபோதுதான், தீவிரவாதம் குறித்த தனது நிலையை மாற்றிக் கொண்டது அமெரிக்கா. எனது நாடு 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
யாரையும் தாக்கலாம்
தீவிரவாதம் எங்கும் தாக்கலாம், யாரையும் தாக்கலாம். இதை உலகம் உணர வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது உலகத்தின் கடமையாகும்.
சர்வதேச அளவில் எழுப்புவேன்
சர்வதேச அளவில் தீவிரவாதம் குறித்த பிரச்சினையை நான் தொடர்ந்து எழுப்புவேன். காரணம், தீவிரவாதத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்க முடியாது.
நாடுகளை ஐ.நா. ஒருங்கிணைக்க வேண்டும்
70வது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஐ.நா. தீவிரவாதத்திற்கு எதிராக நாடுகளைத் திரட்ட வேண்டும். உலகம் அமைதியாக திகழ தீவிரவாதத்தை வேரறுக்க அது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
காந்தியும், புத்தரும்
புத்தரும், காந்தியும் அவதரித்த பூமியிலிருந்து வந்துள்ளேன். இருவரும் அமைதியின் சின்னங்களாக திகழ்பவர்கள். உலகமும் அமைதியில் வாழ வேண்டும் என்றார் மோடி.