ஒபாமா போல் வெட்டிப் பேச்சு கிடையாது.. செயலில் என் திறமையைக் காட்டுவேன்-பாபி ஜிண்டால்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா போல், வெட்டியாக பேசாமல், செயலில் என் திறமையைக் காட்டு வேன் என்று, அமெரிக்க அதிபர் தேர்தலில் குதித்துள்ள, பாபி ஜிண்டால் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால் , லூசியானா மாகாண கவர்னராக உள்ளார். இவரது பதவிக்காலம், 2016 ஜனவரியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், பாபி ஜிண்டால், தனது தேர்தல் பிரச்சாரத்தை நியு ஆர்லியன்ஸ் நகரில் துவக்கினார்.
அப்போது பாபி ஜிண்டால் பேசியதாவது..
அமெரிக்க அதிபர் ஒபாமா போல், வெட்டியாக பேசிக் கொண்டிருக்காமல், செயலில் என் திறமையைக் காட்டுவேன்.
ஆப்ரிக்க-அமெரிக்கர்கள், ஐரிஷ் அமெரிக்கர்கள், பணக்கார அமெரிக்கர்கள், ஏழை அமெரிக்கர்கள், இந்திய அமெரிக்கர்கள் என்று, யாரும் இல்லை. நாம் அனைவருமே அமெரிக்கர்கள் தான்.
பிரச்சாரம் தொடங்கியதுமே பாபி ஜிண்டால் பேசிய இந்த கருத்து டுவிட்டரில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2016) நவம்பர் மாதம் 8-ந்தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஜனாதிபதி ஒபாமா, இருமுறை பதவி வகித்துவிட்ட நிலையில் மூன்றாவது முறையாக போட்டியிட இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.