தற்கொலை முயற்சி.. ஜன்னலில் தொங்கிய வேலைக்காரப் பெண்.. வீடியோ எடுத்த குரூர ஹவுஸ் ஓனர்!
குவைத்தில் ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இளம் பெண்ணின் உயிர்ப் போராட்டத்தை வீட்டு உரிமையாளர் வீடியோ எடுத்தது ஷாக கொடுத்துள்ளது.
குவைத்: குவைத்தில் 7வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து ஜன்னலில் தொங்கி கொண்டிருந்த எத்தியோப்பிய நாட்டு வேலைக்காரப் பெண்ணை, அவரது உரிமையாளர் பெண் வீடியோ எடுத்தது பார்ப்பவர் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
எண்ணெய் வளம் நிறைந்த அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் 7 லட்சத்துக்கும் அதிகமான வீட்டு பணிப் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அதிக ஊதியம் கொடுப்பதாக ஏஜென்டுகள் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்கின்றனர்.
அங்கு அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பது மட்டுமல்லாமல், அவர்கள் உரிமையாளர்களால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தலுக்குள்ளாகின்றனர்.
ஊதியம் வழங்குவதில்லை
அவர்களுக்கு பேசப்பட்ட ஊதியம் வழங்கப்படுவதில்லை. சித்திரவதைகளை சந்திக்கின்றனர். வெளியேறவும் முடியாது. அதற்கும் வீட்டு உரிமையாளரின் அனுமதி தேவை. வறுமையை பயன்படுத்தி அரபு நாடுகளில் பணத்தாசை காண்பித்து ஏஜென்டுகளால் பணியமர்த்தப்படும் அவர்களிடம் மணிக்கணக்கில் வேலை வாங்குகின்றனர்.
அடித்து சித்திரவதை
எத்தனையோ கீழ்நிலை ஊழியர்களை அவர்களின் உரிமையாளர்கள் மாட்டை அடிப்பது போல் அடித்து துன்புறுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் அவதியுற்று வருகின்றனர். வெகு சிலரே தங்கள் நாட்டு தூதரகங்களை நாடி அவர்களின் உதவியை பெற்று தாயகம் திரும்புகின்றனர்.
பயங்கரம்
இவ்வாறு மனசாட்சி இல்லாமல் பணியாளர்கள் துன்புறுத்தப்படும் நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ, பார்ப்பவர் மனதை நடுங்க வைத்துள்ளது. அதாவது குவைத்தில் 7வது மாடியில் உள்ள வீட்டில் பணியாற்றும் எத்தியோபிய நாட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி மேற்கொள்கிறார்.
அலறல் சப்தம்
ஜன்னலில் தொங்கி கொண்டிருக்கும் அவர் இறுதியில் தனது முடிவை மாற்றி கொண்டு தனது உயிரை காப்பாற்றுமாறு விரல் நுனியில் ஜன்னல் விளிம்புகளை பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறார். ஆனால் அவரது உரிமையாளர் பெண்ணோ அவரை காப்பாற்றாமல் கையில் செல்போன் எடுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே அந்த காட்சிகளை நேரலையாக படம் பிடித்து கொண்டிருக்கிறார்.
பதறாமல் படம் எடுத்த பெண்
வேறு வழியில்லாமல் அப்பெண் கையை விட்டு விட்டு கீழே விழுகிறார். அதையும் அந்த உரிமையாளர் பெண் படமாக்குகிறார். பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிய அப்பெண் பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் உயிர் பிழைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
போலீஸ் விசாரணை
போலீஸார் உரிமையாளர் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குவைத் மனித உரிமைகள் ஆணையமும் விசாரணைக்கு அழைத்துள்ளது. எத்தியோப்பிய பெண்ணின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.