எடுக்க எடுக்க கல்லா வருதே- சீன டாக்டர்களை பயமுறுத்திய நபர்.. சிறுநீரகத்திலிருந்து 420 கற்கள் அகற்றம்
பெய்ஜிங்: சீனாவில் வயிற்று வலியால் துடித்த நபரை ஸ்கென் செய்து பார்த்த டாக்டர்கள் அவரது சிறுநீரகத்தில் கல் இருப்பதை அறிந்து ஆபரேஷனில் இறங்கினர். ஆனால் எடுக்க எடுக்க கல்லாக வந்ததால் டாக்டர்கள் அதிர்ந்து போய் விட்டனர். மொத்தம் 420 கற்கள் அவரது சிறுநீரகத்திலிருந்து அகற்றப்பட்டது.
சிறுநீரகத்தில் கல் உருவாவது இயல்புதான். இதுபோன்று கல் வந்தால் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுவார்கள். ஆனால் சீனாவைச் சேர்ந்த ஒருவருக்கு சிறுநீரகத்தில் நூற்றுக்கணக்கில் கல் சேர்ந்து பெரும் ஆச்சரிய அலையை ஏற்படுத்தி விட்டார்.
அவருக்கு வயது 55. சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஜின்ஹுவா நகரைச் சேர்ந்தவர். அங்குள்ள டாங்க்யாங் மக்கள் மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தனர். அவருக்கு சிடி ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அப்போது கல் சேர்ந்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரது சிறுநீரகத்தில் ஆபரேஷன் செய்யப்பட்டது. 2 மணி நேரம் நடந்த அறுவைச் சிகிச்சியன்போது எடுக்க எடுக்க கல்லாக வந்ததால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 420 கற்கள் அவரது சிறுநீரகத்தில் சேர்ந்திருந்தது.
அந்த நபரின் சாப்பாடு முறைதான் இவ்வளவு கற்கள் தேங்கக் காரணம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்தக் கற்கள் கால்சியம் சல்பேட் ஆகும். சரியாக தண்ணீர் குடிக்க மாட்டாராம் இவர். இதுவும் கல் உருவாக முக்கியக் காரணம். சரியாக தண்ணீர் குடிக்காததால் இவர் அதிக அளவில் சிறுநீரும் கழிக்காமல் இருந்துள்ளார்.
ஆனால் இவருக்கு இப்படி கல் வந்தது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 20 வருடங்களுக்கு முன்பு கல் வந்து ஆபரேஷன் செய்த போது 10 கற்களை எடுத்தனராம்.
என்ன வேடிக்கை என்றால் இவருக்குத் தண்ணீர் குடிக்கவே பிடிக்காதாம். அதுதான் இவரது சிறுநீரகத்தை இப்படிப் பதம் பார்த்து விட்டதாக டாக்டர்கள் சொல்கின்றனர்.