அந்த நாள் ஞாபகம் ஆருயிரே... கேமரா மூலம் மீண்டும் திருமண நாளை உருவாக்கிய சீனத்தம்பதி
பீஜிங்: தங்களது 70வது திருமண நாளை வித்தியாசமாகக் கொண்டாட விரும்பிய சீனத் தம்பதி ஒன்று, திருமண நாளன்று புகைப்படம் எடுத்துக் கொண்ட அதே இடத்தில் மீண்டும் திருமண கோலத்தில் புகைப்படம் எடுத்துள்ளனர்.
சீனாவின் சிறந்த காதல் ஜோடியாக காவ் யூஹூவா மற்றும் வேங் தேயி தம்பதியினர் கருதப்படுகின்றனர். ஷாங்காய் நகரைச் சேர்ந்த இந்த ஜோடி இரண்டாம் உலகப்போரின் போது பணி நிமித்தம் பிரிந்தது.
சீனா-பர்மா-இந்தியா எல்லையில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தார் காவ். அப்போது, போருக்கு இடையிலும் இந்தக் காதல் ஜோடி கடிதங்கள் மூலம் தங்களது காதலை வளர்த்தனர்.
திருமணம்...
பின்னர் 1945-ம் ஆண்டு சாங்கிங் நகரத்தில் உள்ள ஒரு பூங்காவில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்போது மணக்கோலத்தில் இருவரும் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
70வது திருமணநாள்...
இந்நிலையில், சமீபத்தில் இந்த தம்பதி தங்களது 70வது திருமண நாளைக் கொண்டாடினர். அன்றைய தினம் திருமணத்தன்று அணிந்தது போன்றே உடையணிந்து, அதே இடத்தில் இருவரும் சேர்ந்து மீண்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
இது தான் ரகசியம்...
விவாகரத்துகள் அதிகமாகி வரும் இந்த சூழ்நிலையில், 70 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து வரும் இந்தத் தம்பதியினர், ‘ஒருவரை ஒருவர் அன்பாகக் கவனித்துக் கொள்வதே தங்களது இனிமையான வாழ்க்கையின் ரகசியம் என்கின்றனர்.
100வது வயதிலும்...
தற்போது 98 வயதை எட்டியிருக்கும் இந்தத் தம்பதி தமது நூறாவது வயதிலும் இந்தப் பூங்காவுக்கு வர விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.