ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல்.. கம்யூட்டர்களை காப்பாற்ற புனித நீர் தெளித்த ரஷ்யா!
ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலில் இஇருந்து தப்பிக்க ரஷ்யாவில் தேவாலய பாதிரியார்கள் உள்துறை அமைச்சகத்தின் சர்வர்களில் புனித நீர் தெளித்தனர்.
மாஸ்கோ: ரஷ்ய உள்துறை அமைச்சகத்தில் உள்ள கம்யூட்டர்களை ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற பாரம்பரிய ரஷ்ய கிறிஸ்துவ சபையில் உள்ள பாதிரியார்களை வைத்து புனித நீரை தெளித்து வழிபாடுகள் நடத்தப்பட்டது.
ரேன்சம்வேர் வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள அரசு மற்றும் பெரு நிறுவன அலுவங்களில் உள்ள கம்யூட்டர்களை ஹேக் செய்து வருகிறது.
மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் ரேன்சம்வேர் வைரஸ் திறக்கும் போது கணினியின் தகவல்கள் முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்வதோடு, 300 டாலர்கள் முதல் 600 டாலர்கள் வரை டிஜிட்டல் பணம் எனப்படும் பிட்காயின் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது.
பணம் கொடுத்தால் மட்டுமே தகவல்கள் மீண்டும் விடுவிக்கப்படும். இந்த ஹேக்கர் வைரஸ் மூலம் இதுவரை 150 நாடுகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க பல்வேறு நாடுகளும் பல மென்பொருள் வல்லுநர்களை பயன்படுத்தி வருகிறது.
இதனால் இந்தியா உட்பட வங்கதேசம் மற்றும் அமரிக்க, ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்றும் பாதிக்கப்பட்ட நாடுகள் ஆலோசித்து வருகின்றன.
இந்நிலையில் ரஷ்யா, ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க அங்குள்ள பாரம்பரிய ரஷ்ய கிறிஸ்தவ சபையில் உள்ள உயர்மட்ட பாதிரியார்களை அழைத்து வந்து வழிபாடு நடத்தினர். மேலும் உள்துறை அமைச்சகத்தின் சர்வர்களில் புனித நீரை தெளித்து, கம்யூட்டர்களையும், மற்ற தொழில்நுட்ப சாதனங்களையும் புனிதப்படுத்தும் பணியை செய்தனர்.