வரலாறு காணாத பனிப்புயல்... வெறிச்சோடிய நியூயார்க்... வீட்டை விட்டு வெளியே வந்தால் அபராதம்!
நியூயார்க்: அமெரிக்கா மற்றும் கனடாவில் வரலாறு காணாத பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் அங்கு பெரும் ஸ்தம்பிப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் குளிர்காலப் புயல் காரணமாக 90 செ.மீ அளவுக்கு பனிப் பொழிவு ஏற்படக் கூடும் என்று வானியல் வல்லுநர்கள் அறிவித்துள்ளனர். இந்தப் பனிப்புயல் காரணமாக, வரலாற்றில் இல்லாத அளவு அங்கு பனிப்பொழிவு ஏற்படக் கூடும் என அமெரிக்காவின் தேசிய வானிலை சேவைகள் மையம் அறிவித்துள்ளது.
இதனால், அமெரிக்கா மற்றும் கனடாவில் சுமார் 7 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் கடுமையான காற்றும் வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மக்களை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என நியூயார்க் மேயர் கூறியுள்ளார். தொடர்ந்து இடை விடாமல் அப்பகுதியில் பனிப்பொழிவு காணப்படுவதால், சாலைகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போன்று காணப்படுகின்றன.
இந்த பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகரமே வெறிச்சோடிப் போய் காணப்படுகிறது. சாலைகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே வர அங்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் 300 டாலர் அபராதம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
2012ல் வந்த சாண்டி புயலுக்குப் பிறகு இப்போதுதான் நியூயார்க் நகரம் முமுமையாக வெறிச்சோடிப் போயுள்ளது. இதுவரை நியூயார்க் நகரத்துக்கு பனிப்புயலால் பேராபத்து ஏதும் ஏற்படவில்லை. எனினும், கனெக்டிக், லாங் ஐலண்ட், மாசசூசட்ஸ் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பனிப் பயுல் வீசி வருகிறது. இதனால் அங்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.