முக்திநாத் யாத்திரை சென்று நேபாளத்தில் சிக்கிய திருச்சி பக்தர்கள்.. பாதுகாப்பாக இருப்பதாக தகவல்!
காத்மாண்டு: நேபாள நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திருச்சியிலிருந்து யாத்திரையாக சென்ற குழுவினர் அங்கு சிக்கியுள்ளனர். ஆனால் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
திருச்சியில் உள்ள நாமகிரி டிராவல்ஸின் உரிமையாளர் குலசேகரன் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 பேர் கடந்த 20ம் தேதி, முக்திநாத்துக்கு யாத்திரைச் சென்றனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக இந்திய அதிகாரிகள் கூறியதாக டிராவல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் சென்ற நூறு பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இத்தகவலை அம்மாநில காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து சுற்றுலாச் சென்ற 187 பேரும் நேபாளத்தில் சிக்கியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து நேபாளத்திற்கு யாத்திரை சென்ற 60 பேர் கொண்ட குழுவினரையும் தொடர்பு கொள்ள முடியாததால், அவர்களது உறவினர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.