அஸாத்தின் கொடூர ரசாயன தாக்குதலுக்குப் பதிலடி.. சிரியா விமான தளம் மீது யுஎஸ் ஏவுகணைத் தாக்குதல்
சிரியா நாட்டின் விமான தளம் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டமாஸ்கஸ்: சிரியா நாட்டில் உள்ள விமான தளம் மீது சுமார் 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
சிரியா நடத்திய ரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்திருப்பதாக கூறப்படுகிறது.
சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் செவ்வாய்கிழமையன்று ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது. நடத்தப்பட்ட நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர்.
இந்த விஷவாயு தாக்குதலில் 20 குழந்தைகள், பெண்கள் உள்பட 72 பேர் உயிரிழந்ததாக மேற்கத்திய ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன. குளோரின் விஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா. சபை பிரதிநிதிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உள்ளாட்டு போர்
உள்நாட்டுப் போரினால் பெரும் பாதிப்புக்குள்ளான சிரியா நாட்டில் தங்களது வீடுகளையும், இருப்பிடங்களையும் விட்டு புலம்பெயர்ந்து உள்நாட்டிலேயே அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர்.
ரசாயன ஆயுதங்கள்
ரசாயன வெடிகுண்டுதாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்கள் உலகை உலுக்கிய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். சிரியாவில் நிகழ்ந்தது மிகவும் கொடூரமானது. எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாதது. இது எல்லை மீறிய தாக்குதல். குறிப்பாக பலியான குழந்தைகளின் புகைப்படங்கள் என்னை வெகுவாக பாதித்ததுள்ளது.
டிரம்ப் எச்சரிக்கை
சிரியா மீதும் சிரியா அதிபரின் மீதான எனது பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிஞ்சுக் குழந்தைகள் மீதான விஷவாயு வெடிகுண்டு தாக்குதல் துளியும் மனிதநேயம் இல்லாதது என்று கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுடன் அமெரிக்கா மற்றும் எங்கள் கூட்டணி நாடுகள் உறுதுணையாக நிற்கும். நடந்த இந்தச் சம்பவத்திற்கு உலகளாவிய கண்டனத்தை அமெரிக்கா பதிவு செய்கிறது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினரை முற்றிலுமாக அழித்து பொதுமக்களை பாதுகாப்பதே எங்களது தலையாய பணி எனவும் அவர் கூறினார்.
ஏவுகணைத் தாக்குதல்
சிரியாவில் நிகழ்த்தப்பட்ட ரசாயன வெடிகுண்டு தாக்குதல் எந்த நிலையிலும் சகித்துக் கொள்ள முடியாது எனவும், சிரியா மீதான தன்னுடைய பார்வை மாறியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய நிலையில் இன்று 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை சிரியா விமான தளம் மீது அமெரிக்கா ஏவியுள்ளது. கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சிரியா கடற்படைத் தளத்திலிருந்து 50 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக பெண்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.