ட்ரம்பின் புதிய ஆணை... சிரியா, ஈரான் உள்ளிட்ட ஆறு நாட்டு குடிமக்களுக்கு தடை!
வாஷிங்டன்(யு.எஸ்). அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முதலாவது அரசாணைக்கு நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், திருத்தப்பட்ட புதிய அரசாணையை திங்கட்கிழமை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆணையின் படி சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, ஏமன் மற்றும் சூடான் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்காவிற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது
முன்னதாக ஈராக் நாட்டினவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஈராக் அதிபரும்,
அதிகாரிகளும் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஈராக் குடிமக்களுக்கான தடையை நீக்கச் செய்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் க்கு தீவிர எதிர்ப்பு காட்டிவரும் ஈராக் நாட்டை, அமெரிக்காவின் நண்பனாகப் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் ஈராக்கிற்கு தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆறு நாடுகளைச் சார்ந்த குடிமக்கள், அமெரிக்காவில் க்ரீன் கார்டு வைத்து இருந்தாலோ அல்லது முறையான வேறு விசாக்கள் வைத்து இருந்தாலோ அனுமதிக்கப்படுவார்கள். முதல் உத்தரவின் போது, தடை செய்யப்பட்டிருந்த விசாக்களுக்கும் தற்போது அனுமதி வழங்கப்படுகிறது.
க்ரீன்கார்டு மற்றும் விசா வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற தெளிவான முடிவு மூலம், இந்தியர்களுக்கும் எந்த சிக்கலும் ஏற்பட வாய்ப்பில்லை.
அதே சமயத்தில் அனைத்து நாட்டிலிருந்தும் வரும் அகதிகளுக்கு 120 நாட்கள் தடை என்ற உத்தரவு மீண்டும் அமலுக்கு வருகிறது.
அகதிகள் விசயத்தில் மதவாரியான சிறுபான்மையினருக்கு முன்னுரிமை என்ற சலுகை முன்னர் கூறப்பட்டிருந்தது. தற்போது அது நீக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களை குறிவைத்து இந்த விதி உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தடவை அனைத்து குடியுரிமை, வெளியுறவு, உள் நாட்டு விவகாரம் என அனைத்து துறை அதிகாரிகளையும் கலந்து ஆலோசித்து, முன்னதாக அறிவிப்புகளை அனுப்பி கருத்துப் பெற்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடைமுறை சிக்கல்கள் வராதவாறு அமல்படுத்தப்படும் என்றும் தெரிகிறது. மேலும் எந்த வித ஆர்ப்பாட்டங்களுக்கும் இடம் தராமல், மிகவும் சாதாரண நிகழ்வு போல் இந்த ஆணையில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
முந்தைய ஆணையின் போது ஏற்பட்ட குழப்பத்திலிருந்து பாடம் கற்றுக் கொண்டுவிட்டார்கள் எனத் தெளிவாகத் தெரிகிறது.
- இர தினகர்