ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி செனட்டர்கள் போர்க்கொடி.. அதிபருக்கான தன்மை இல்லையாம்!
வாஷிங்டன்(யு.எஸ்): அதிபர் ட்ரம்பின் சொந்தக் கட்சி செனட்டர்கள், அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இரு அவையிலும் மெஜாரிட்டியுடன்ஆளும்கட்சியாக குடியரசுக் கட்சி இருக்கிறது. 100 பேர் கொண்ட செனட் அவையில் 52 பேர் குடியரசுக் கட்சியினர் ஆவார்.
சுழற்சி முறையில் செனட் அவைக்கு தேர்தல் நடைபெறும். அடுத்த ஆண்டு 33 இடங்களுக்கு தேர்தல் உண்டு. 23 பேர் ஜனநாயகக் கட்சியினர் 8 பேர் குடியரசுக் கட்சியினர். பெர்னி சாண்டர்ஸ் உட்பட சுயேட்சைகள் இருவர்.
ஏற்கனவே ஜனநாயகக் கட்சியினர் வசம் உள்ள இடங்களிம் மீண்டும் வெற்றி பெற்று, குடியரசுக் கட்சியினரிடமிருந்து 4 இடங்களைப் பெற்றால், செனட் மெஜாரிட்டி ஆகிவிடுவார்கள். சட்டங்கள் நிறைவேற்ற ட்ரம்புக்கு கடும் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். தங்களுக்கு சாதகமான சட்டங்களையும் இணைத்து நிறைவேற்றவும் வாய்ப்பு உண்டு.
தற்போது அமெரிக்காவில் நடக்கும் அனைத்து அரசியலும் 2018ம் ஆண்டு செனட் தேர்தலை குறிவைத்தே இருக்கிறது. ட்ரம்பின் செல்வாக்கு மிகக் குறைந்த அளவில் இருப்பதால்,அவரைக் காட்டி வாக்கு பெற முடியாது என்ற எண்ணத்தில் செனட்டர்கள் உள்ளனர். ஆகையால் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ட்ரம்ப் மீது குற்றம் சாட்டி, அவருக்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் காட்டிக் கொள்கின்றனர்.
சமீபத்தில் சார்லட்ஸ்வில் நகரில் நடந்த இனவெறி சம்பவத்தை சுட்டிக்காட்டி, அதற்கு ட்ரம்பின் ஒரு தலைப் பட்சமான ட்விட்களையும் குற்றம் சாட்டி குடியரசுக் கட்சி செனட்டர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளனர்.
மீண்டும் தேர்தலை சந்திக்க உள்ள பாப் கார்க்கர், ஜெஃப் ஃப்ளேக் ஆகிய இருவரும் ட்ரம்ப், அதிபர் பதவிக்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளனர். குடியரசுக் கட்சியின் ஒரே கருப்பின செனட்டரான தெற்கு கரோலைனா டிம் ஸ்காட்டும் ட்ரம்ப்- ஐ சாடியுள்ளார். ஜான் மெக்கய்ன் எப்போதுமே ட்ரம்ப்-க்கு எதிரான நிலைப்பாடு எடுத்து வருகிறார்.
கடும் போட்டி நிலவும் செனட் மாநிலங்களின் குடியரசுக் கட்சியின் போட்டியாளர்களும் ட்ரம்ப்-ஐ விட்டு விலகியே நிற்கின்றனர். அமெரிக்க அதிபருக்கு அவருடைய சொந்தக் கட்சி செனட் உறுப்பினர்களே எதிர்ப்புக் குரல் எழுப்புவது அசாதாரணமான ஒன்றாகும்.
ட்ரம்ப் வெற்றி பெற்றது முதல் அனைத்துமே அவருக்கு அசாதாரணமானதுதானே!
-இர தினகர்