சிரியா எல்லையில் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி விமானங்கள்! விமானி சாவால் பதற்றம்
இஸ்தான்புல்: துருக்கி-சிரியா நாட்டு எல்லையில் ரஷ்ய நாட்டு ராணுவ போர் விமானத்தை துருக்கி போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளன. விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதை ஒரு தொலைக்காட்சி சேனல் எடுத்து ஒளிபரப்பியது. விமானம் தீப்பிடித்து எரிந்தபடி கீழே விழுவது அந்த காட்சிகளில் உள்ளது.
துருக்கி வான் எல்லைக்குள் அந்த விமானம் அத்துமீறி நுழைந்ததாகவும், எனவே துருக்கி போர் விமானங்கள் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் அந்த தொலைக்காட்சி சேனல் கூறியிருந்தது. இதை துருக்கியும் உறுதி செய்துள்ளது.
10 முறை அந்த விமானத்தை எச்சரித்த பின்னரே தங்களது போர் விமானங்கள் அதை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி கூறியுள்ளது. இந்த தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானத்தின் 2 பைலட்கள் பாராசூட் மூலம் குதித்து தப்பியதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதில் ஒரு விமானியை சிரிய நாட்டில் அதிபருக்கு எதிராக போராடி வரும் சிரிய சுதந்திரப் படை போராளிகள் கைது செய்துள்ளதாகவும், இன்னொருவர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த பைலட்டை, சுற்றிலும், போராளிகள் நின்று கோஷமிடும் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அந்த இரு பைலட்களும் உயிரோடு இருப்பதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#SONDAKİKA!Türkmen Dağı'nın yakınına savaş uçağı düştü...Uçağın düşme anını Habertürk TV ekibi görüntüledihttps://t.co/PCUK9Z6RTA
— Habertürk TV (@HaberturkTV) November 24, 2015
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் எந்த நாட்டுடையது என்பது முதலில் தெரியாமல் இருந்தது. சிரியாவில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா போன்ற பல நாட்டு படைகளும் போர் புரிந்துவருகின்றன. எனவே இது எந்த நாட்டு போர் விமானமாக இருக்கலாம் என்ற குழப்பம் நீடித்தது.
ஆனால், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், அது தங்கள் நாட்டு விமானம் என்று அறிவித்த பிறகு குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், "துருக்கி ராணுவத்தால் வீழ்த்தப்பட்டது ரஷ்யாவின் சுகோய்-24 வகை போர் விமானம். ரஷ்யா அத்துமீறி துருக்கி எல்லைக்குள் நுழையவில்லை. விமானம் சுடப்பட்டபோது, ரஷ்ய விமானம், 6,000 மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருந்தது" என்று கூறப்பட்டது.
தமது விமானம் இன்னொரு விமானத்திலிருந்து சுடப்படவில்லை, தரையிலிருந்துதான் சுடப்பட்டுள்ளது எனவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை கூறுகிறது.
மேலும், போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது சீரியசான விஷயம் என்று ரஷ்ய அதிபர் புடின் கோபம் வெளிப்படுத்தியுள்ளார்.