லண்டன் 24 மாடி கட்டிட தீ விபத்து: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு !
லண்டன்: லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
லண்டனில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கிரென்பெல் டவர் என்ற 24 மாடி கட்டிடத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பல மணிநேரமாக தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ கட்டுக்கடங்காமல் கட்டிடம் முழுவதும் பரவி பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இவ்விபத்தில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. தீ கட்டுக்கடங்காமல் விடாமல் எரிந்து வருவதால் மீட்பு பணிகளில் ஈடுபடுவது சிக்கலாக இருக்கிறது.
மேலும் இந்த தீ விபத்தில் காயமடைந்த 79 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 18 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
அந்த கட்டடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிகிச்சை பெறுபவர்களை தவிர மீதமுள்ளவர்களில் எத்தனை பேர் தப்பித்தனர், எத்தனை பேர் அங்கு சிக்கியிள்ளனர் என்ற விவரம் தெரியாத நிலை உள்ளது.