'பாஸ்வேர்டுகளை" இல்லாமல் செய்யும் ட்விட்டரின் புதிய முயற்சி
வாஷிங்டன்: மொபைல் ஆப்ஸ் அப்ளிகேஷனில் உள்ளே நுழைய பாஸ்வேர்டு இல்லாத புதிய முறையை ட்விட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது.
எத்தனை பாஸ்வேர்டுகளை நினைவில் வைப்பது என்ற சலிப்பு இயல்பாக ஏற்படுவதுதான்.. அதேபோல் பாஸ்வேர்டு திருட்டு என்பதும் பெரும் குடைச்சலாகத்தான் இருந்து வருகிறது.
இதற்கு தீர்வு காணும் முயற்சியின் முதல் கட்டமாக ட்விட்டர் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் மொபைலில் ஆப்ஸில் உள்ளே நுழைய வேண்டுமெனில் உங்கள் மொபைல் நம்பர், எந்த நாடு என்ற விவரத்தை மட்டும் தெரிவித்தால் போதும்.
உடனே கன்பர்மேசன் கோடு எண்கள் நமக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம் உள்ளே நுழையலாம். நீங்கள் பயன்படுத்தி முடித்த உடன் இந்த கன்பர்மேசன் கோடு இயல்பாகவே செயலிழந்து விடும். பாஸ்வேர்டு பஞ்சாயத்துக்கு முடிவு கட்டும் வகையில்தான் இதனை ட்விட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் ட்விட்டர் பிரதான அக்கவுண்ட்டுக்குள் நுழைவதற்கு இந்த முறையை அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.