பிரான்ஸ் தேவாலயத்திற்குள் புகுந்த 2 பேர் சுட்டுக்கொலை.. பிணைக் கைதிகள் பத்திரமாக மீட்பு
பாரீஸ்: பிரான்சின் வடக்கு பகுதியில் தேவாலயம் ஒன்றுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த இரண்டு பேர், அங்கிருந்த பாதிரியார், 2 கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட 5 பேரை ஆயுத முனையில் பிணைக் கைதிகளாக சிறைபிடித்தனர். போலீசார் நடத்திய தாக்குதலில், அந்த இரண்டு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரில் நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
பிரான்ஸ் நாட்டில் அண்மைக் காலமாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 130 பேர் பலியாகி இருந்தனர். இதனையடுத்து அந்நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் நைஸ் நகரில், பிரான்சின் தேசிய தினத்தை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்த போது, தீவிரவாதி ஒருவன், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கன்டெய்னர் லாரியை பொதுமக்கள் மீது ஏற்றி மோதினான். இதில், 84 பேர் பலியாகினர். இந்த தாக்குதலை தொடர்ந்து, பிரான்சில் போலீஸ் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், பிரான்ஸின் வடக்கு நோர்மன்டி பகுதியில் தேவாலயம் ஒன்றுக்குள் ஆயுதம் தாங்கிய 2 பேர் திடீரென நுழைந்தனர். அங்கிருந்த பாதிரியார், 2 கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட 5 பேரை ஆயுத முனையில் பிணைக் கைதிகளாக சிறைபிடித்தனர். இதனிடையே பிணைக் கைதிகளை மீட்பதற்கு போலீசார் முயற்சித்தனர். ஆனால் ஆயுதம் தாங்கிய நபர்கள் தேவாலயத்தில் இருந்த பாதிரியார் ஹாமெல் (84) சுட்டுக்கொன்றனர்.
இதையடுத்து, அந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் தேவாலயத்திற்குள் புகுந்த போலீசார் நடத்திய அதிரடி தாக்குதலில் இரண்டு பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் பிணை கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஐந்து பேரில், நான்கு பேரை போலீசார் மீட்டனர்.
பாதிரியார் ஹாமெல்லை, அந்த மர்ம நபர்கள், சுட்டுக் கொன்றுவிட்டனர். அவர்கள் இரண்டு பேரும் யார் என்ற விவரம் தெரியவில்லை. இந்த, சம்பவத்துக்கு, இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்த சம்பவத்திலும் ஐஎஸ் தீவிரவாதிகளே ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்று பிரான்ஸ் போலீசார் சந்தேகிக்கின்றனர்.