சவுதியில் 2 இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் கைது
ரியாத்: இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு வெடிபொருட்கள் வழங்கிய ஜெயினுல் ஆபிதீன் மற்றும் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முப்தி சுபியான் ஆகியோர் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பட்கலைச் சேர்ந்த இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி ஜெயினுல் ஆபிதீன் கடந்த 2013ம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள தில்சுக்நகரில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த பிறகு நாட்டை விட்டு தப்போயோடிவிட்டார். இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கு அவர் தான் வெடிபொருட்களை வழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பட்கலில் வைத்து தீவிரவாதி செய்யது அபாக் என்பவர் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது ஜெயினுல் ஆபீதின் சவுதி அரேபியாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் சவுதி போலீசாருக்கு இது குறித்து தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் ஜெயினுல் ஆபிதீனை கைது செய்துள்ளனர். மேலும் சவுதியில் தங்கியிருந்த மற்றொரு இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி முப்தி சுபியானும் கைது செய்யப்பட்டுள்ளார்.
13/7 மும்பை குண்டுவெடிப்புகள், தில்சுக்நகர் தாக்குதலில் சுபியான் மற்றும் ஆபிதீனின் பங்கு பற்றி போலீசார் வசிராணை நடத்தி வருவதோடு முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் அவர்களின் பங்கு பற்றியும் விசாரித்து வருகிறார்கள்.
ஹரேன் பாண்டியா கடந்த 2003ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது. சுபியான் மற்றும் ஆபிதீனை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரித்தால் பாண்டியா வழக்கில் தெளிவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
லக்ஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர்களுக்கு நெருக்கமான சுபியான் முதலில் இந்தியாவில் இருந்து கராச்சி சென்று அதன் பிறகு சவுதி சென்றுள்ளார். அவர் ஹரேன் பாண்டியா வழக்கு, வெடிபொருட்கள் வினியோகித்த வழக்கு உள்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.